ஒரே ஒரு முஸ்லிம் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு நோ ராஜ்யசபா சீட் - பதவி பறிபோகும்?
டெல்லி: மத்திய பாஜக அரசியல் இடம்பெற்ற ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் முக்தார் அப்பாஸ் நக்வியின் மத்திய அமைச்சர் பதவி பறிபோகக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நிறைவடைந்தது. இன்று வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் பாஜக 3 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்தது. மொத்தம் 22 பேரை ராஜ்யசபா எம்.பி. வேட்பாளர்களாக பாஜக அறிவித்தது.
பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பெயர் இடம் பெறும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முக்தார் அப்பாஸ் நக்வியின் பதவி காலம் முடிவடைகிறது. மத்திய அமைச்சராக இருப்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. வேட்பாளர்கள் பட்டியலில் முக்தார் அப்பாஸ் நக்வி பெயர் இடம்பெறவில்லை.
அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாஜக பொதுச்செயலர் துஷ்யந்த் கெளதம், முன்னாள் மத்திய அமைச்சர் சிவ்பிரதாப் சுக்லா, தேசிய செய்தி தொடர்பாளர் சையத் ஜாபர் இஸ்லாம் என பலரது பெயரும் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி லிஸ்ட்டில் இடம்பெறவில்லை என்கிற விவாதம் அக்கட்சியில் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாஜக வட்டாரங்கள் கூறுகையில், உ.பி. மாநிலம் ராம்பூர் லோக்சபா தொகுதிக்கு ஜூன் 23-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அத்தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக முக்தர் அப்பாஸ் போட்டியிட வாய்ப்புள்ளது எனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
அப்படி ஜூன் 23-ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் முக்தார் அப்பாஸ் நக்வி வேட்பாளராக அறிவிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டால் அவரது மத்திய அமைச்சர் பதவி பறிபோகக் கூடிய நிலைமை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications