ஓபிஆர், தம்பிதுரையை விடுங்க.. ரொம்ப எதிர்பார்த்த "அவருக்கே" அமைச்சர் பதவி கிடையாதா? என்ன நடந்தது?
டெல்லி: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, கடைசி வரை உத்தேச லிஸ்டில் இருந்த உத்தர பிரதேச எம்பி வருண் காந்திக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் இன்று செய்யப்பட்டது. அதன்படி புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர். இதில் 15 பேர் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று உள்ளனர்.
12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்களின் இலாக்கா குறித்த அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அமைச்சர்
இந்த அமைச்சரவை மாற்றத்தில் தமிழ்நாட்டில் இருந்து அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் அமைச்சர் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அதிமுக ராஜ்ய சபா எம்பி தம்பிதுரை, பாமக எம்பி அன்புமணி ஆகியோர் அமைச்சர் ஆகலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் இவர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இருந்து பாஜக தலைவர் எல். முருகனுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வருண் காந்தி
இந்த நிலையில் இன்னொரு பக்கம் வருண் காந்தி அமைச்சர் ஆக அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. உத்தர பிரதேசத்தின் பிலிப்பிட் தொகுதியில் இருந்து கடந்த தேர்தலில் லோக்சபாவிற்கு வருண் காந்தி தேர்வானார். கடந்த 3 லோக்சபா தேர்தலில் இதே தொகுதியில் இருந்து வருண் காந்தி தேர்வாகி இருக்கிறார். இந்த நிலையில் இவருக்கு இந்த முறையாவது அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பதவி
அதோடு மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது இவருக்கு கண்டிப்பாக பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதற்கான உத்தேச பட்டியலில் கூட வருண் காந்தி பெயர் இடம்பெற்று இருந்தது. ஆனால் இன்று வெளியிடப்பட்ட 43 அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களின் பட்டியலில் வருண் காந்தி பெயர் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.

ஜாதி ரீதியிலான தேர்வு
டாப் லிஸ்டில் இருந்தவரின் பெயர் இறுதி பட்டியலில் இடம்பெறவில்லை., பெரும்பாலும் ஜாதி ரீதியான பங்களிப்பு இருக்க வேண்டும், அனைத்து பிரிவினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் போய் இருக்கலாம். அடுத்த வருடம் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அங்கு அனைத்து சாதியினரையும் கவரும் வகையில் அமைச்சரவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 7 புதிய அமைச்சர்கள் தேர்வாகி உள்ளனர்.

உத்தர பிரதேசம்
ஜாதி ரீதியாக 8 மாநிலங்களின் 12 தலித்துகளுக்கு மத்திய அமைச்சர் பதவி ஏற்றுள்ளனர். அருணாச்சல் பிரதேசம் உட்பட 8 மாநிலங்களின் 8 பழங்குடியினருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 15 மாநிலங்களின் 27 ஓபிசியினருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பிராமணர், பனியா, லிங்காயத் உள்ளிட்ட முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 29 பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications