தோல்வியை தந்தாலும் பரவாயில்லை என்று... தாராபுரத்திற்கு தனி முக்கியத்துவம் கொடுக்கும் எல்.முருகன்..!
டெல்லி: ஈரோட்டில் இருந்து பழனிக்கு தாராபுரம் வழியாக புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜிடம் தோல்வியை தழுவினார்.
வாக்கு எண்ணிக்கையின் போது காலை முதல் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்த எல்.முருகன் மாலைக்கு பிறகு பின்னடைவை சந்தித்தார். வெறும் 1,393 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தனது வெற்றிவாய்ப்பை பறிகொடுத்த எல்.முருகனால் இதை ஜீரணிக்கமுடியவில்லை.

தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு மிக்க தொகுதிகளில் தாராபுரமும் ஒன்று. அப்படியிருந்தும் அங்கு எல்.முருகன் அடைந்த தோல்வி பாஜகவின் தேசியத் தலைமை வரை விவாதத்திற்கு சென்றது. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே தாராபுரத்தை இலக்காக வைத்து அங்கு அடிக்கடி விசிட் அடித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தார் எல்.முருகன்.
எல்.முருகன் ராசிபுரத்தில் போட்டியிடுவார், அவிநாசியில் போட்டியிடுவார் என ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தாராபுரத்தை தனது சாய்ஸாக தேர்வு செய்தார் எல்.முருகன். இந்நிலையில் எல்.முருகனை தோற்கடித்ததற்கு பரிசாக அவரை எதிர்த்து வெற்றி பெற்ற கயல்விழி செல்வராஜுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தார் ஸ்டாலின்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது, எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தமிழகத்தில் 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றிபெற வைத்ததற்கான பரிசாக இது கருதப்பட்டது.
மத்திய இணை அமைச்சராகிய பிறகு பெரும்பாலும் டெல்லியிலேயே தங்கியிருக்கும் எல்முருகன், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் தாராபுரத்திற்கு தனி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில் ஈரோட்டில் இருந்து பழனிக்கு தாராபுரம் வழியாக புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனியை இணைக்கும் ரயில் பாதை அமைக்க 1915-ம் ஆண்டே ஆங்கிலேயர் காலத்தில் சர்வே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2006-2007-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை இத்திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டு ரூ.289 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், இதுவரை இத்திட்டம் தொடங்கப்படாததால் திட்டமதிப்பு ரூ.1,140 கோடி என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், ஆகிய மூன்று மாவட்ட மக்கள் இத்திட்டம் மூலம் பயன்பெறுவார்கள் என்றும் குறிப்பாக அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இத்திட்டம் உதவிக்கரமாக இருக்கும் எனவும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் எடுத்துக் கூறியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
இதேபோல் வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்தார். தாராபுரத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக ஆகாவிட்டாலும் கூட அந்த தொகுதியின் வளர்ச்சிக்கு எல்.முருகன் முக்கியத்துவம் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications