நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள புதிய வருமான வரி சட்டத்தில் என்ன மாறப்போகிறது தெரியுமா?
டெல்லி: பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், அதேபோல விரைவில் தாக்கல் செய்ய உள்ள புதிய வருமான வரி சட்டம் குறித்தும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், வருமான வரி சட்டம் விரைவில் இந்த காலத்திற்கு ஏற்றார் போல மாற்றி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இரண்டு விஷயங்கள் நடந்தன. ஒன்று ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு. இரண்டாவது, பழைய வருமான வரி முறை குறித்து பேசாதது. முதல் விஷயத்தை பொறுத்த அளவில் நடுத்தர மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க எடுக்கப்பட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீங்கள் ஆண்டுக்கு ரூ.16 லட்சம் வரை சம்பாதிக்கிறீர்கள் எனில்
ரூ.4 லட்சம் வரை வரி இல்லை
ரூ.4 லட்சம் - ரூ.8 லட்சம் வரை 5% வரி (₹20,000)
ரூ.8 லட்சம் - ரூ.12 லட்சம் வரை 10% வரி (₹40,000)
ரூ.12 லட்சம் - ரூ.16 லட்சம் வரை 15% வரி (₹60,000)
என மொத்தம் ரூ.1.2 லட்சம்தான் வரி கட்டுவீர்கள். ஆனால் பழைய வரி முறையில் ரூ.1.7 லட்சத்தை வரியாக கட்ட வேண்டி இருக்கும். அந்த வகையில் புதிய வரி முறை ரூ.50,000 வரை சேமிப்பை கொடுக்கிறது.
இரண்டாவது விஷயத்தை பொறுத்தவரையில், பழைய வரி முறை கைவிடப்படலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள், பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடுகள் மற்றும் மருத்துவ காப்பீடுகளில் முதலீடு செய்திருக்கிறீர்கள் எனில், அதற்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. புதிய வருமான வரி முறையில் இந்த வசதிகள் கிடையாது. கடந்த ஆண்டு 72% பேர் புதிய வருமான வரி முறைக்கு மாறியிருப்பதாக அரசு கூறியுள்ளது. எனவே பழைய வரி முறை விரைவில் முடிவுக்கு வரலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில் அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் நிலையில், அதில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து ஆங்கில செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வருமான வரி சட்டம் நவீனமானதாகவும், 21ம் நூற்றாண்டுக்கு பொருத்தமானதாகவும் மாற்றப்பட இருக்கிறது.
இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் வரி செலுத்துவோர், தங்கள் வரி தொடர்பான விவகாரங்களை ஆன்லைன் மூலம் தாங்களே கையாளுகின்றனர். இது சீராக நடக்க வேண்டும் எனில் வரி விதிப்பு முறையை எளிமைப்படுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வரி செலுத்தும் வரி செலுத்தும் நடைமுறை சிம்பிளாக மாறும். எளிமையான வரி முறையை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு” என்று கூறியுள்ளார்.
எனவே அடுத்த வாரம் தாக்கல் செய்ய உள்ள புதிய வருமான வரி சட்டத்தில் இந்த விஷயங்களை எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications