7,25,000 இந்தியர்களை நாடு கடத்தும் அமெரிக்கா! சட்டவிரோத குடியேற்றம் என்கிற பெயரில் டிரம்ப் ஆட்டம்
டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 7.25 லட்சம் இந்தியர்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜூவ் சுக்லா தெரிவித்திருக்கிறார்.
"நேற்று நான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தேன். இந்த கூட்டத்தில்தான், அமெரிக்கா 7.25 லட்சம் இந்தியர்களை சட்ட விரோதம் என்று கூறி நாடு கடத்தப்பட இருக்கும் விஷயம் தெரிய வந்தது. இந்த மக்கள் அனைவரும் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வசித்து வந்திருக்கிறார்கள். நன்றாக சம்பாதித்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அவர்களிடம் எதுவும் இல்லை. இந்தியாவுக்கு வந்த பின்னர் அவர்கள் என்ன செய்வார்கள்? பணக்காரர்களாக இருந்து ஒரே நாளில் அவர்கள் ஏழைகளாக மாற்றப்படுகிறார்கள்" என்று ராஜூவ் சுக்லா கூறியுள்ளார்.

அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளரும் இந்த விஷயத்தை உறுதி செய்திருக்கிறார். "அமெரிக்கா தனது எல்லையை சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக மூடுகிறது. குடியேற்றம் தொடர்பான சட்டங்களை நாங்கள் கடுமையானதாக மாற்றுவோம். அத்துடன் சட்டவிரோதமாக குடியேறிவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.
இப்போது வரை எத்தனை இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்கிற விவரம் வெளியாகவில்லை. ஆனால் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு இது எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப்புக்கு நண்பர் என்று சொல்லப்பட்டாலும், அமெரிக்காவில் பல ஆண்டுகள் வசித்து வரும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்காமல், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவது குறித்து மத்திய அரசால் கடுமையான எதிர்வினையை ஆற்ற முடியவில்லை. நாடு திரும்பும் இந்தியர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்கிற டோனில் மத்திய அரசு பதிலளித்து வருகிறது.
அமெரிக்காவில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக உயிரை கொடுத்து இந்தியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் இத்தனை ஆண்டுகால இந்தியர்களின் உழைப்பு இருக்கிறது. இப்போது இந்த இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று சொல்லி அமெரிக்கா தூக்கி எறிகிறது. அதேபோல இவர்கள் மூலம் பெற்ற லாபத்தையும் தூக்கி எறிய வேண்டியதுதானே! என்று இந்தியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நாடு கடத்தல்கள் இன்று திடீரென நடக்கவில்லை. இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்களை நாடு கடத்த வேண்டும் என்று அமெரிக்க மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். வெளிநாட்டினரால் எங்களின் வேலை வாய்ப்பு பறிபோய்விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்களின் இந்த உணர்வை புரிந்துக்கொண்ட டிரம்ப், நான் அதிபரானால் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவேன் என்று கூறியிருந்தார். அதேபோல இப்போது நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications