ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரூ.11.45 கோடியா? அய்யய்யோ இல்லங்க.. பதறிப்போய் விராட் கோலி ட்வீட்!
டெல்லி: இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு ரூ. 11.45 கோடி பெறுவதாக பரவிய தகவல் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. எனது சமூக ஊடக வருமானம் குறித்து பரவி வரும் செய்திகள் உண்மையல்ல என கோலி தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராம் தளத்தில் தாங்கள் பகிரும் சில பதிவுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் பெறுவது உண்டு. அதன் மூலம் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கும். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்பான்சர் பதிவுகள் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்கள் குறித்த தகவலை ஹாப்பர் ஹெச்.க்யூ எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, விளையாட்டுப் பிரபலங்களில் முதல் மூன்று இடங்களில் ரொனால்டோ, மெஸ்ஸி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. ரொனால்டோ ஒரு பதிவுக்கு ரூ.26.76 கோடி ஈட்டுகிறார். மெஸ்ஸி ரூ.21.49 கோடி ஈட்டுகிறார். கோலி ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி ஈட்டுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஹாப்பர் ஹெச்.க்யூ நிறுவனம் வெளியிட்ட இந்தப் பட்டியலில் உலக அளவில் டாப் 20 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார். இந்த பட்டியலில் மற்றொரு இந்தியரான பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 29-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் ஒரு பதிவுக்கு ரூ 4.40 கோடி பெறுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அதிக நபர்கள் பின்தொடரும் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. இன்ஸ்டாகிராமில் கோலியை 256 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளதாக ஹாப்பர் க்யூ நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் செய்திகள் பரவின.
இந்த நிலையில் இன்று விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். விராட் கோலி தனது ட்வீட்டில் "வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நன்றி உள்ளவனாக கடமைப்பட்டவனாக இருக்கிறேன். ஆனால் நான் சமூக வலைதளத்தில் ஒரு பதிவுக்கு சம்பாதிக்கும் பணம் தொடர்பாக செய்திகள் உண்மையல்ல என்று சொல்லிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications