Manickam Tagore: மன்னிப்பு கேட்க சாவர்க்கர் கிடையாது.. மத்திய அரசு எதை மறைக்க நினைக்கிறது? மாணிக்கம் தாகூர் கேள்வி
டெல்லி: மன்னிப்பு கேட்டு சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற கோர மாட்டோம். மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கர் வழி கிடையாது, நாங்கள் காந்தி வழி வந்தவர்கள். அமெரிக்க வேளாண் பொருள் இறக்குமதிக்கு பூஜ்ஜிய வரி பற்றி பேசிவிடுவோம் என பயம். சீன விவகாரத்தில் எதை மறைப்பதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது? எப்ஸ்டீன் பைல் குறித்து விவாதித்துவிடுவோம் என பயந்துள்ளதா? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீன விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி பேச அனுமதிக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டதாலும், மேஜை மீது ஏறி ஆவணங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை மீது எறிந்ததாலும் காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் உள்பட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மாணிக்கம் தாகூர் விளக்கம்
எதிர்க்கட்சி எம்பிக்கள் ஹிபி ஈடன், அமரிந்தர் சிங், ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, பிரசாந்த் யாதவ்ராவ் படோலே மற்றும் கிரண் குமார் ரெட்டி உள்பட 8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையினை எதிர்த்து காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணிக்கம் தாகூர் எம்பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளின் குரலை நெருக்கும் செயலாகவே இதனை பார்க்கிறோம். எதிர்க்கட்சிகளின் குரல் பிரதமர் மோடிக்கு கேட்கக் கூடாது என்று நினைக்கிறார். தமிழகத்தின் குரல் கேட்கக் கூடாது, தெலுங்கு மக்களின் குரல் கேட்கக் கூடாது, கேரள மக்களின் குரல் கேட்கக் கூடாது, உத்தரபிரதேச மக்கள் குரல் கேட்கக்கூடாது என நினைத்துக்கொண்டு இருந்தால் எங்கள் போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கும்.
எதை மறைக்க நினைக்கிறார்கள்?
எதை மறைக்க விரும்புகிறார்கள் என்பது தான் இப்போது கேள்வி.. நார்வென்னாவின் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை பற்றி மறைக்க விரும்புகிறார்களா? அல்லது சீனாவிடம் அடிபணிந்ததை மறைக்க விரும்புகிறார்களா?.. அல்லது, அமெரிக்கா வரி விதிப்பு தொடர்பாக ராகுல் காந்தி கேட்டுவிடுவார் என்பதற்காக பயப்படுகிறார்களா?
எஃப்ஸ்டீன் ஃபைல்ஸ் பற்றி பேசிவிடுவோம் என பயப்படுகிறார்களா? அல்லது, அமெரிக்க வேளாண் பொருள் இறக்குமதிக்கு பூஜ்ஜிய வரி போட்டு ஏழை விவசாயிகள் வயிற்றில் அடித்தது பற்றி கேட்டுவிவோம் என்று பயப்படுகிறார்களா? இது எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்காக தான் சஸ்பெண்ட் பண்ணிட்டா பிரச்சினை இல்லை என நினைத்துவிட்டார்களா?
மன்னிப்பு கேட்க மாட்டோம்
பேப்பர் கிழிச்சி எரிந்தால் சஸ்பெண்ட், கேள்வி கேட்டால் சஸ்பெண்ட் என நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மன்னிப்பு கேட்டால் தான் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெறுவோம் என்றால் நாங்கள் மன்னிப்பு கேட்க மாட்டோம். மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கர் வழி வந்தவர்கள் கிடையாது, நாங்கள் காந்தி வழி வந்தவர்கள். இவ்வாறு மாணிக்கம் தாகூர் பேசினார்.












Click it and Unblock the Notifications