பாகிஸ்தான் திட்டங்கள் முறியடிப்பு.. எங்க பைலட்கள் வீட்டுக்கே போயாச்சு – இந்திய ராணுவம் மாஸ் அப்டேட்
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் நிறுத்தம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் போட்ட சதித்திட்டத்தை வீழ்த்திவிட்டு, இந்திய விமானப்படையின் பைலட்கள் பாதுகாப்பாக வீடு திரும்பி விட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா தரப்பில், ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் பரஸ்பரம் மோதலில் ஈடுபட்டதால் இரு நாட்டுகளிடையே போர் வெடித்தது. இதனிடையே நேற்று மாலை இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டை எட்டியுள்ளன என்று அறிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த முடிவை பல்வேறு உலக நாடுகள் வரவேற்றன. ஆனால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் தரப்பில் இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தான் டிரோன் பறந்தன. பாகிஸ்தான் போர் ஒப்பந்தத்தை மீறியதாக இந்தியாவும் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் ஏர் மார்ஷல் ஏகே பார்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்திய விமானப்படையை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. பாகிஸ்தானின் சில விமானங்களை நாங்கள் வீழ்த்திவிட்டோம். இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.
அவர்களின் பிரச்சாரத்தை இந்திய ஆயுதப்படை முறியடித்துவிட்டது. மேலும் எங்களின் விமானப்படை பைலட்கள் எல்லாம் பாதுகாப்பாக வீடு திரும்பிவிட்டனர்." என்றார். மேலும், "கடந்த மே 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை இந்தியா நடத்திய தாக்குதலில் சுமார் 100 தீவிரவாதிகள் மற்றும் 35-40 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்." என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ நடவடிக்கைகள் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய் செய்தியாளர்களிடம், "ஆபரேஷன் இப்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எதிரி முன்னேற எந்த வகையிலும் இடம் கொடுக்க மாட்டோம். விமானிகள் அனைவரும் தங்களின் வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். போரில் எதுவும் செய்ய முடியாததால் தற்போது போர் நிறுத்தத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் இங்கு ஊடுருவ முயற்சி செய்கிறது. அதை தொடர்ந்து முறியடித்து வருகிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications