பாஜகவின் சதி முறியடிப்பு.. எந்த விலை கொடுத்தும் இட ஒதுக்கீட்டை பாதுகாப்போம்.. அடித்து சொன்ன ராகுல்
டெல்லி: அரசியலமைப்பையும் இட ஒதுக்கீட்டையும் எந்த விலை கொடுத்தாவது நாங்கள் பாதுகாப்போம். நேரடி நியமனம் என்ற பாஜகவின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். உயர் பதவிகளில் நேரடி நியமன அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியிருக்கிறார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 10 இணை செயலாளர்கள், 35 இயக்குனர்கள் மற்றும் துணை செயலாளர்கள் என 45 அதிகாரிகள் பணியிடங்களை லேட்ரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதுபோன்ற உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீஸ் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறைக்கும் மாற்றாக இந்த நேரடி நியமன அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நேரடி நியமனம் மூலம் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை ஒழிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறின. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிராக் பாஸ்வான் கூட தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.
எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இருந்து வந்த அழுத்தத்தால் பணிந்த மத்திய அரசு, உயர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் செய்யும் முடிவை கைவிட்டது. இது குறித்து யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. இதையடுத்து, மத்திய அரசில் பணியாற்ற நேரடியாக மூத்த அதிகாரிகள் 45 பேரை நியமிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் எனப் பிரதமர் கூறியுள்ளார் என்றும் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நேரடி நியமன நடைமுறை இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எந்த விலை கொடுத்தாவது இட ஒதுக்கீட்டை பாதுகாப்போம் என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- அரசியலமைப்பையும் இட ஒதுக்கீட்டையும் எந்த விலை கொடுத்தாவது நாங்கள் பாதுகாப்போம். நேரடி நியமனம் என்ற பாஜகவின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் என்ற வரம்பை உடைத்து சாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக நீதியை நிலைநாட்டுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேரடி நியமனம் தொடர்பாக யுபிஸ்சி அறிவிக்கை வெளியிட்டதுமே ராகுல் காந்தி தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். ராகுல் காந்தி கூறியிருந்ததாவது:- யுபிஎஸ்சிக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் மூலம் பொது ஊழியர்களை தேர்வு செய்ய முடிவு செய்து இருப்பதன் மூலம் பிரதமர் மோடி அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
முக்கிய பொறுப்புகளில் நேரடியாக நியமனம் செய்யப்படுவதன் மூலம் ஒபிசி, தலித் உள்ளிட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்களின் உரிமையை திருடுவது சமூக நீதி மீது நடத்தப்படும் தாக்குதல்" எனக் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications