காருக்கு அடியே கதறிய பெண்.. தெரிந்தும் 12 கிமீ ஓட்டி சென்ற குற்றவாளிகள்! அரண்டுபோன டெல்லி போலீஸ்
டெல்லி: தலைநகர் டெல்லியில் இளம் பெண் ஒருவர் 14 கிமீ காரில் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்தார். இந்நிலையில், அந்தச் சம்பவம் குறித்து குற்றவாளிகள் கொடுத்துள்ள அதிர்ச்சி வாக்குமூலம் இப்போது வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று கொடூர விபத்து ஒன்று நடைபெற்றது. இதில் 20 வயதே ஆன அஞ்சலி சிங் என்ற பெண் காருக்கு அடியே இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்த பெண்கள் மீது அவர்கள் எதிர்பாராத விதமாக மோதியுள்ளனர்.

14 கிமீ இழுத்துச் செல்லப்பட்ட உடல்
இதில் கீழே விழுந்த பெண்ணின் கால் காருக்கு அடியே சிக்கியுள்ளது. ஆனாலும், அவர்கள் வண்டியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டியுள்ளனர். ஒரே பகுதியைச் சுற்றிச் சுற்றியும் வந்துள்ளனர். இப்படியே அவர்கள் பல கிமீ தூரத்திற்குப் பெண்ணின் உடலை இழுத்துச் சென்றுள்ளனர். இப்படியே அந்த பெண்ணின் உடல் சுமார் 14 கிமீ தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை அங்குக் கடை வைத்திருந்த ஒருவர் நேரில் பார்த்துள்ளார். அவர் காரை நிறுத்த முயன்ற போதும் அவர்கள் நிறுத்தவில்லை. இறுதியில் ஒரு இடத்தில் திரும்பும்போது, அந்த பெண்ணின் உடல் காரில் இருந்து அதுவாகவே விழுந்துள்ளது.

பிரேத பரிசோதனை
பெண்ணின் தாயாரும் இது குறித்து சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.. புத்தாண்டு அன்று நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்வதாகவும் திரும்பத் தாமதமாகும் என்றும் தனது பெண் முன்னரே தன்னிடம் கூறிய அவர், காரில் மட்டும் சிக்கியிருந்தால்.. உடைகள் எல்லாம் எப்படி இல்லாமல் போகும் என்று பகீர் சந்தேகம் கிளப்பியிருந்தார். இருப்பினும், அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று உறுதியானது.. பெண்ணின் அந்தரங்க உறுப்பில் காயம் எதுவும் இல்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

7 பேர் கைது
இந்தச் சம்பவம் குறித்து இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த போது காரில் ஐந்து பேர் இருந்ததாகவும் அவர்களில் சிலர் மதுபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகின.இது குறித்து தீபக் கண்ணா, மனோஜ் மிட்டல், அமித் கண்ணா, கிரிஷன், மிதுன், அசுதோஷ் (கார் உரிமையாளர்) மற்றும் அங்குஷ் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அசுதோஷ் மற்றும் அங்குஷ் ஆகியோர் குற்றத்தை மறைக்க மற்ற ஐந்து பேருக்கு உதவ முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டனர். முதலில் பெண் காரில் சிக்கியது தங்களுக்குத் தெரியாது என்றே இவர்கள் கூறி வந்தனர்.

முன்பே தெரியும்
இதனிடையே இதில் சில அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பெண் கீழே சிக்கியிருந்தது அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. இருப்பினும், எங்குக் காரை நிறுத்தி அந்தப் பெண்ணைக் காப்பாற்றினால், கொலை வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அஞ்சி அவர்கள் காரை தொடர்ந்து இயக்கியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். பெண்ணின் உடல் காரில் சிக்கியதை உணர்ந்ததும் அவர்கள் ரொம்பவே பயந்து போய்விட்டனர். எங்குக் காரை நிறுத்தி எதாவது செய்தால் தங்கள் மீது வழக்கு பாய்ந்துவிடுமோ என்று அஞ்சி, அவர்கள் பெண்ணின் உடல் கீழே விழும் வரை வாகனம் ஓட்டிக்கொண்டே இருந்துள்ளனர்..

பொய்யான தகவல்
முதலில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது காருக்குள் சத்தமான இசை இருந்ததாகவும் இதனால் உடல் காரில் சிக்கியதைக் கவனிக்கவில்லை என்றும் என்று கூறியிருந்தனர். ஆனால், தற்போது அவை அனைத்தும் பொய் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை
முன்னதாக உயிரிழந்த அஞ்சலி சிங்கிற்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் பெண்ணுக்கு 40 இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது விலா எலும்புகள் முதுகில் இருந்து வெளியே வந்து விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், அவளது மண்டை ஓட்டின் அடிப்பகுதி உடைந்து, அவளது மூளைப் பொருள் காணவில்லை. அவளுக்குத் தலை, முதுகுத்தண்டு மற்றும் கீழ் மூட்டுகளில் காயங்கள் இருந்தன என்று அந்த பிரேதப் பரிசோதனையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications