பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்! லோக்சபா தேர்தல் எதிர்பார்ப்பு நிறைவேறியதா? ஸ்பெஷல் என்ன?
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று காலை 11 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். செய்யப்பட உள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரி குறைப்பு, பெண்கள், தொழில்துறையினரை கவரும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. தற்போது பட்ஜெட் தாக்கலான நிலையில் எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா? இல்லையா? என்பது பற்றிய விபரம் வருமாறு:
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் மத்திய பட்ஜெட் தாக்கலாக உள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு புதிய ஆட்சி என்பது அமைய உள்ளது. இதனால் இன்று தாக்கலாகும் இந்த பட்ஜெட் என்பது இடைக்கால பட்ஜெட் என அழைக்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முறைப்படி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் இந்த கூட்டத்தொடர் என்பது தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்களின் கூட்டு கூட்டத்தில் நேற்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.
இதையடுத்து இன்று காலையில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார். அதோடு தொடர்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மோராஜி தேசாயின் சாதனையும் அவர் சமன் செய்தார்.
முன்னதாக இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் லோக்சபா அரங்கில் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். மொத்தம் 56 நிமிடங்கள் வரை பட்ஜெட் அம்சங்களை அவர் வாசித்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இந்நிலையில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இன்றைய பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து இருந்தது.
தேர்தல் சமயம் என்பதால் வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் இருக்கலாம் என மக்கள் எதிர்பார்த்தனர். அதன்படி தொழில்துறைக்கான சலுகைகள், மாநில வாரியாக திட்டங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட கவர்ச்சிகரமான அம்சங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வரி குறைப்பு, தொழில்துறைக்கான சலுகைகள் என்பது பற்றிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மாநில வாரியாக நிதி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் ரூ.6331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவத்தும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா? வருமான வரி செலுத்தும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா? மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மானியம், கடனுதவி தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா என எதிர்பார்க்கப்ப்பட்டது. ஆனால் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதுமட்டுமின்றி பெண்களின் சக்தியை பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகயை எடுத்து வருகிறது. அதன்படி இந்த பட்ஜெட்டில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்பட்டது. அதன்படி பெண்களைப் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்குவிக்கப்படும்.
மேலும் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும். அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். இதுதவிர 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகு புதிய ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் முழு பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இந்த பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவீனத்திற்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரூ.11,11,111 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் கொள்கை அளவில் பெரிய மாற்றங்களை பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படியே இன்றைய பட்ஜெட் என்பது கொள்கை அளவில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரி குறைப்பு மற்றும் வருமான வரிக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படாதது உள்ளிட்ட அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறாதது என்பது நடுத்தர மாத சம்பளதாரர்களுக்கு சற்று ஏமாற்றமாக அமைந்துள்ளது. மற்றபடி வழக்கமாக இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் அம்சங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த இடைக்கால பட்ஜெட் என்பது குறுகிய காலத்துக்கானது தான். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய ஆட்சி அமைந்த பிறகு ஜுலை மாதம் மீண்டும் முழு பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்படும். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் என்பது இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications