மோடி அரசின் அதிரடி பிளான்.. இனி வகை வகையாக இறங்கும் வந்தே பாரத்.. அடேங்கப்பா வேற லெவல் தான்
டெல்லி: இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கிடையே வந்தே பாரத் ரயிலுக்கு மத்திய அரசு என்ன மாதிரியான திட்டத்தை வைத்துள்ளது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
உலகிலேயே மிகப் பெரிய ரயில் நெட்வொர்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.. இந்தியாவில் நீண்ட தூரம் பயணிக்க விரும்பும் பயணிகளின் முதல் சாய்ஸாக ரயில்களே இருக்கிறது.
இதன் காரணமாக முக்கிய விஷேச நாட்களில் பல வாரங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிடும். டாய்லெட் வசதி டிக்கெட் விலை குறைவு எனப் பல காரணங்களால் ரயில்களையே பொதுமக்கள் தேர்வு செய்கிறார்கள்.

வந்தே பாரத்:
இந்தியாவில் எந்தவொரு முக்கிய நகரத்திற்கும் நம்மால் விமானம் மூலம் சென்று சேர முடியும். அதேநேரம் இந்தியாவில் ரயில்கள் பழைய தொழில்நுட்பத்திலேயே இருக்கிறது. போதிய வேகம் மற்றும் தொழில்நுட்பம் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில் தான், ரயில்வே துறை சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தே பாரத் ரயிலை அறிமுகம் செய்தது.
அந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி தரும் வகையில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்தது. முற்றிலும் குளிர்சாதன வசதி, தானியங்கி கதவுகள், வைஃபை என இறங்கிய இந்த வந்தே பாரத் ரயில்கள் வந்த உடனேயே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்போது நாடு முழுக்க 17 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது.. இதில் தமிழ்நாட்டில் சென்னை- பெங்களூர்- மைசூர், சென்னை- கோவை வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது.
இதற்குப் பயணிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. நாடு முழுக்க இன்னும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே வந்தே பாரத் ரயில்களுக்கு வரும் காலத்தில் மத்திய அரசு என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளது என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
3 வகையான ரயில்கள்:
அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களின் மூன்று வெர்ஷன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாட்டில் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், வந்தே சேர் கார் (Vande Chair Car), வந்தே மெட்ரோ (Vande Metro) மற்றும் வந்தே ஸ்லீப்பர்ஸ் (Vande Sleepers) என்று மூன்று வகை ரயில்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "வந்தே பாரத்தில் மூன்று வெர்ஷன்கள் உள்ளன. 100 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்குச் செல்லும் ரயில்கள் வந்தே மெட்ரோ... 100-550 கிலோமீட்டர்களுக்கு இயங்கும் ரயில்கள் வந்தே சேர் கார்.. 550 கிலோமீட்டர்களுக்கு மேல் செல்லும் ரயில்கள் வந்தே ஸ்லீப்பர்ஸ் என்று வகைப்படுத்தப்படும். இந்த மூன்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரெடியாகிவிடும்" என்றார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து டெல்லி வரை இயங்கும் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் வந்தே பாரத் ரயில் இருக்கும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
160 கிமீ வேகம்:
அவர் மேலும் பேசுகையில், "ஒவ்வொரு 8, 9 நாட்களுக்கு ஒரு முறை ஒரு புதிய வந்தே பாரத் ரயில் தொழிற்சாலையில் இருந்து வெளிவருகிறது. இன்னும் இரண்டு தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ரயில்கள் உற்பத்தி தொடங்கப் போகிறது. விநியோகச் சங்கிலி சீரானதும், பல வந்தே பாரத் ரயில்கள் தொடர்ச்சியாக வரும். வந்தே பாரத் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் பாதையின் திறனுக்கு ஏற்ப 130 கிமீ வேகத்தில் இயங்கும்.
அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் நாடு முழுக்க வந்தே பாரத் ரயில்கள் அதிகபட்ச வேகத்தை எட்டும் வகையில் ரயில் பாதைகள் மேம்படுத்தப்படும். பழைய ரயில் பாதைகளில் ரயில்களால் அதிகபட்சம் 70 முதல் 80 கிமீ வேகத்தில் தான் செல்ல முடியும். நாடு முழுக்க இருக்கும் ரயில் பாதைகளில் 30,000-35,000 கிலோமீட்டர் பாதைகளில் மணிக்கு 110 கிமீ, 130 கிமீ மற்றும் 160 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இது அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications