"தனிப்பெரும்பான்மை இல்லை என்றால் பாஜகவின் பிளான் பி என்ன?" வந்து விழுந்த கேள்வி! அமித் ஷா பரபர பதில்
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்ல முடியவில்லை என்றால் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித் ஷா பதிலளித்துள்ளார்.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது.. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தலில் 400 இடங்களில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பாஜக தேர்தலை எதிர்கொண்டுள்ளது. ஆனால், இந்த தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை கூடப் பெற முடியாது என்றும் இந்தியா கூட்டணியே ஆட்சியை அமைக்கும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
அமித் ஷா: இதற்கிடையே பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாஜகவால் வெல்ல முடியவில்லை என்றால் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித் ஷா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அவர், "பிளான் ஏ வெற்றியடைவதற்கு 60 சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்பு இருந்தால் மட்டுமே பிளான் பி குறித்து யோசிக்க வேண்டும்" என்று பதிலளித்தார்.
நமது நாட்டில் மொத்தம் 543 லோக்சபா இடங்கள் உள்ளன. இதில் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க அதில் 50%, அதாவது குறைந்தது 272 சீட்களில் வெல்ல வேண்டும். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக மட்டும் தனியாக 309 இடங்களில் வென்று இருந்தது. என்டிஏ கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிளான் பி: தனிப்பெரும்பான்மை குறித்து கேள்விக்கு அமித் ஷே மேலும் பேசுகையில், "பிரதமர் மோடி நிச்சயம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.. இதனால் பிளான் பி குறித்தெல்லாம் சிந்திக்கத் தேவையில்லை.. நான் சொல்வதை நீங்கள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் பார்ப்பீர்கள்" என்றார்.
அமித் ஷா தொடர்ச்சியாக பல்வேறு பேட்டிகளிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும் என்றே தொடர்ந்து கூறி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்த முறை தென் மாநிலங்களில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார். தென் மாநிலங்களில் கர்நாடகா தவிர மற்ற மாநிலங்களில் பாஜக அந்தளவுக்கு வலிமையானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி பேச்சு: பிரதமர் மோடியும் கூட சமீபத்தில் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கிட்டதட்ட இதேபோன்ற கருத்தைக் கூறியிருந்தார். தென்மாநிலங்களில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று கூறிய மோடி, குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி க்ளீன் ஸ்வீப் செய்யும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தல்: லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை இப்போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் மொத்தம் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளன. எஞ்சிய தொகுதிகளுக்கு வரும் மே 20, மே 25 மற்றும் ஜூன் 1ஆம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. அதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications