90% சரிவு.! ஐரோப்பா செல்லும் டீசல் ஏற்றுமதி திடீர் வீழ்ச்சி! கையை பிசையும் இந்தியா! ஆனா ஒரு ட்விஸ்ட்
டெல்லி: இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும் டீசல் ஏற்றுமதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் சர்வதேச நிகழ்வுகளுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டதாகும். சர்வதேச அளவில் தொடர்ச்சியாக நடக்கும் வணிகங்களே இதற்குக் காரணமாகும்.

ஒவ்வொரு நாட்டில் இருந்தும் உலகின் மற்ற நாடுகளுக்குத் தொடர்ச்சியாக வணிகம் நடந்தே வருகிறது. இப்போது உலகம் ஸ்மூத்தாக இயங்க இந்த சர்வதேச வணிகம் முக்கிய காரணமாகும்.
சர்வதேச வணிகம்: உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு சாதாரண மொபைல் போனை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிராசஸர் ஒரு நாட்டில் இருந்து வரும், டிஸ்பிளே ஒரு நாட்டில் இருந்து வரும், பேட்டரி மற்றொரு நாட்டில் இருந்து வரும்.. அவை அனைத்தும் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும். அந்த மொபைல்கள் இந்தியாவில் விற்கப்படும் நிலையில், சில சமயம் அவை மீண்டும் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் கூடச் செய்யப்படும்.
இதுபோல சர்வதேச வணிகம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இப்போது பெரும்பாலும் கடல் போக்குவரத்து மூலமாகவே இந்த சர்வதேச வணிகம் நடந்து வருகிறது. இதில் எதாவது பிரச்சினை வந்தால் அதன் பாதிப்பு உலகளவில் இருக்கும். இப்படி தான் கடந்த 2021 மார்ச் மாதம் சுயஸ் கால்வாயில் ஏற்பட்ட சிறு விபத்து ஒட்டுமொத்த வணிகத்தை மொத்தமாக முடக்கியது. இப்போது அதேபோலத் தான் செங்கடலில் நடக்கும் தாக்குதல் இந்தியாவுக்குப் பெரிய தலைவலியைத் தருகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடும் பாதிப்பு: இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் சுத்திகரிக்கப்பட்ட டீசல் ஏற்றுமதி கடந்த 2022 முதல் இல்லாத வகையில் இந்த மாதம் மிக கடுமையாகக் குறைந்துள்ளது. வணிகக் கப்பல்களைக் குறிவைத்து ஹவுதி படைகள் தாக்குதல்கள் நடத்தி வருவது சர்வதேச வர்த்தகத்தைத் தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது.
செங்கடலில் ஹவுதி தாக்குதலால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் உடன் ஆசியாவில் உள்ள முக்கிய சுத்திகரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்படாத பராமரிப்பு பணிகளும் சேர்ந்து கொள்ளவே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனுக்குச் செல்லும் டீசல் ஏற்றுமதி சரிந்துள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
குறைவு: பிப்ரவரி முதல் இரண்டு வாரங்களில் இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு தினசரி சராசரியாக 18,000 பீப்பாய் எரிபொருள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஒரே மாதத்தில் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்ட டீசல் ஏற்றுமதி 90% குறைந்துள்ளது. ஐரோப்பா வரை ஏற்றுமதி செய்ய ஆகும் செலவுகள் அதிகரித்துள்ளதே இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இத்தனை நாட்களில் இல்லாத வகையில் எப்படி இப்போது மட்டும் ஐரோப்பாவுக்குச் செல்ல இப்போது மட்டும் திடீரென செலவு அதிகரிக்கும் என்ற கேள்வி வரலாம்

இது குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகையில், "ஐரோப்பாவுக்குச் செல்ல வேண்டும் என்றால் செங்கடல் வழியாகச் சென்றால் தான் தூரம் குறைவாக இருக்கும். ஆனால், அங்கே ஹவுதி தாக்குதல் அச்சம் இருப்பதால் தென்னாப்பிரிக்காவின் கேப் ஆஃப் குட் ஹோப்பைச் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவே செலவுகள் அதிகரிக்கக் காரணம். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஐரோப்பாவுக்கு அனுப்புவதற்குப் பதிலாகச் சிங்கப்பூர் உள்ளிட்ட கிழக்கே நாடுகளுக்கு டீசலை அனுப்ப விரும்புகின்றன" என்றார்.
பிரச்சினை இல்லை: இதனால் தென்கிழக்கு ஆசியா- ஐரோப்பா இடையேயான எரிபொருள் ஏற்றுமதி இறக்குமதி கடுமையாகப் பாதித்து உள்ளதாம். குறிப்பாக இம்மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டீசல் ஒரு பீப்பாய் கூட செல்லவில்லையாம். பிரிட்டனுக்கு மட்டும் ஒரே ஒரு கப்பல் சென்றுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஐரோப்பாவுக்குச் செல்லும் டீசல் குறைந்தாலும் கூட இதனால் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை. ஏனென்றால் இப்போது சவுதி, வங்கதேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் எரிபொருள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications