அயோத்தி கும்பாபிஷேகத்தை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர்கள்.. இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், இன்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி தொடங்கிப் பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையே இந்த நாளில் நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ராகுல் காந்தி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அசாமில் பாரத் ஜோடோ நீதி யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் மணிப்பூரில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. அசாமின் சமூக சீர்திருத்தவாதியான துறவி ஸ்ரீமந்தா சங்கர்தேவாவின் பிறந்த இடமான நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ரவா தானுக்கு ராகுல் காந்தி இன்று செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்தவுடன் மாலை 3 மணிக்குப் பிறகு ராகுல் காந்தி படத்ரவாவுக்குச் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. படத்ரவாவுக்குள் அனுமதிக்காததால் ராகுல் காந்தி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அழுத்தமே இதற்குக் காரணம் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
மம்தா பானர்ஜி: மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இன்று கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் சர்ப தர்மம் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் பூஜை செய்து, அதைத் தொடர்ந்து பேரணியில் மம்தா கலந்து கொள்ளவுள்ளார்.. அனைத்து மதத்தினரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை, வரும் லோக்சபா தேர்தலுக்காக திரிணாமுல் காங்கிரஸ் பயன்படுத்துவதாக மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைக் குறிக்கும் வகையில், 'ஷோபா யாத்திரை' என்ற பெயரில் கெஜ்ரிவால் யாத்திரை நடத்துகிறார். டெல்லியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த நிகழ்வை நடத்த உள்ளனர். டெல்லி அரசு ஏற்பாடு செய்த மூன்று நாள் ராம்லீலா நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். தனக்கு அழைப்பு வராததால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்ற கெஜ்ரிவால், பின்னாட்களில் நிச்சயம் குடும்பத்துடன் ராமர் கோயிலுக்குச் செல்வேன் என்று தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே: மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரே, நாசிக்கில் உள்ள காலராம் கோயிலில் பிரார்த்தனை செய்து, கோதாவரி நதிக்கரையில் 'மகா ஆரத்தி' நிகழ்ச்சியை நடத்துகிறார். அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் சிவசேனா கட்சிக்கு முக்கிய பங்கு இருக்கும் நிலையில், உத்தவ் தாக்கரே முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர்கள்: ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் அகிலேஷ் யாதவ்வுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்ட போதிலும், அவர் சோசலிஸ்ட் தலைவர் ஜனேஷ்வர் மிஸ்ராவுக்கு அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுள்ளார். அதேநேரம் பிரதிஷ்டை விழாவுக்குப் பிறகு அவர் குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்லவுள்ளதாகக் கூறியுள்ளார். என்சிபி தலைவர் சரத் பவாரும் கூட கிட்டதட்ட இதே கருத்தைக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications