"கவலையா இருக்கு.." நாடாளுமன்ற தாக்குதல்.. முதல்முறையாக மவுனம் கலைத்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்
டெல்லி: நாடாளுமன்றத்தில் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஸ்ப்ரே தாக்குதல் நடத்திய நிலையில், இது குறித்து முதல்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறியுள்ளார்.
கடந்த புதன்கிழமை அத்துமீறி நாடாளுமன்றத்தில் நுழைந்து சிலர், ஸ்ப்ரே தாக்குதல் நடத்தினர். புகை குப்பிகளை வீசிய அவர்கள், லோக்சபாவில் ரகளை செய்தனர். உள்ளே அவர்கள் புகை குப்பிகளை வீசும் போது வெளியேயும் சிலர் ரகளை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுக்க பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாகக் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்,, அவர்கள் மீது உபா உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தாக்குதல்: கடந்த 2001இல் இதே டிசம்பர் 13ஆம் தேதி தான் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதே நாளில் இவர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் போலீசார் விசாரணை நடத்த ஏதுவாக ஏழு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் பூஜ்ஜிய நேரத்தின் பொது கேலரியில் இருந்து லோக்சபாவுக்குள் குதித்தனர். மேலும், தங்கள் கைகளில் இருந்த புகை வரும் குப்பிகளையும் அவர்கள் வீசினர். இதையடுத்து சபாநாயகரை நோக்கி கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் சென்ற நிலையில், அங்கிருந்த எம்பிக்களே அவர்களைப் பிடித்துக் கொடுத்தனர்.
பிரதமர் மோடி: இதற்கிடையே நாடாளுமன்றத்தில் ஸ்ப்ரே தாக்குதல் நடந்து சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி கருத்து கூறியுள்ளார். இந்தத் தாக்குதலைத் துரதிர்ஷ்டவசமானது என குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவம் நிஜமாகவே கவலைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தேவையான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்தச் சம்பவத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இது தொடர்பாகப் பிரதமர் மோடி மேலும் கூறுகையில், "நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தின் தீவிரதன்மையை குறைத்து மதிப்பிடக்கூடாது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்" என்று கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
திட்டம் என்ன: அவர் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தில் புலனாய்வு அமைப்புகள் முழு விசாரணையை நடத்தி வருகிறது. இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் திட்டம் என்ன? வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்து தீர்வு காண வேண்டும் என்பது குறித்து நாம் முடிவெடுக்க வேண்டும். எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் இந்த விவகாரத்தை நாம் அணுக வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் சர்ச்சை அல்லது எதிர்ப்பை தவிர்க்க வேண்டும்" என்றார்.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திற்குள் அவர்கள் இருவருக்கும் பாஸ் வழங்கியது பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா என்பது தெரிய வந்துள்ள நிலையில், அவரிடமும் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தொடர்பாக இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இதில் மூளையாகச் செயல்பட்ட லலித் ஜா ராஜஸ்தான் தப்பிச் செல்ல திட்டமிட்ட நிலையில், போலீசார் தேடுதல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியதால் அவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications