"மூச்சுமுட்டும் இந்தியா.." அதிக காற்று மாசு! டாப் 10இல் 6 இந்திய நகரங்கள்.. சென்னைக்கு எந்த இடம்
காற்று மாசு என்பது இப்போது உலக நாடுகள் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
டெல்லி: சமீபத்தில் உலக காற்று தர அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் அதிக மாசடைந்த டாப் 50 நகரங்களில் 39 இந்தியாவில் உள்ளன. இதில் சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களின் நிலையைப் பார்க்கலாம்.
அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்ட காரணங்களால் நமது சுற்றுச்சூழல் மாசடைவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டிலும் முந்தைய ஆண்டை காட்டிலும் மாசு அதிகரித்தே கொண்டே இருக்கிறது.
அதிலும் குறிப்பாகக் காற்று மாசு இந்தியாவின் முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான டாப் நகரங்கள் காற்று மாசு காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

காற்று மாசு
இதனிடையே கடந்தாண்டில் ஏற்பட்ட காற்று மாசு குறித்த தரவுகள் வெளியாகியுள்ளது. அதில் உலகளவில் அதிகம் மாசடைந்த நகரங்களில் இந்தியா எட்டாவது இடத்தில் இருக்கிறது. PM 2.5 மாசு 53.3 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டராக குறைந்துள்ள போதிலும், அது உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான வரம்பை விட 10 மடங்கு அதிகமாகவே இருக்கிறது. சுவிஸ் நாட்டை சேர்ந்த IQAir என்ற அமைப்பு 'உலக காற்று தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. காற்றில் உள்ள PM 2.5 அளவை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது.

எந்த நாடு மிக மோசம்
இந்த PM 2.5 மாசு தான் ஆபத்தானதாகக் கருதப்படுவதால், இந்தப் பட்டியல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மொத்தம் 131 நாடுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பெறப்பட்ட மாசு அளவை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஆப்பிரிக்க நாடான சாட் அதிக மாசடைந்த நாடாக உள்ளது. அங்கு PM 2.5 மாசு 89.7ஆக உள்ளது. அதற்கு அடுத்து ஈராக், பாகிஸ்தான், பஹ்ரைன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வங்கதேசம், புர்கினா பாசோ, குவைத் நாடுகள் 5-7 இடங்களைப் பிடித்துள்ளன.

எட்டாவது இடத்தில் இந்தியா
இதில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது. 53.3 PM 2.5 மாசுடன் இந்தியா எட்டாவது இடத்தில் இருக்கிறது. அதேபோல டாப் 10 நகரங்களில் 6 இந்திய நகரங்கள் உள்ளன. அதேபோல டாப் 50 நகரங்களில் 39 இந்தியாவில் உள்ளன. பாகிஸ்தானில் உள்ள லாகூர் மற்றும் சீனாவின் ஹோட்டான் ஆகிய நகரங்கள் அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் டாப் இரண்டு இடங்களில் உள்ளன. இத்தனை ஆண்டுகள் இந்தியாவில் அதிக மாசடைந்த நகராக டெல்லி இருந்து வந்த நிலையில், இப்போது ராஜஸ்தானின் பிவாடி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அடுத்து நான்காவது இடத்தில் டெல்லி இருக்கிறது.

தலைநகர் டெல்லி
டெல்லியில் PM 2.5 அளவு 92.6 மைக்ரோகிராமாக உள்ளது. இருப்பினும், இது பாதுகாப்பான வரம்பை விடக் கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாகும். டெல்லி இதுவரை மாசுபட்ட நகராக இருந்த நிலையில், இந்தாண்டு தான் தலைநகர் டெல்லிக்கும், கிரீட்டர் டெல்லியையும் தனித்தனியாகப் பிரித்துள்ளனர். இதன் காரணமாகவே டெல்லி முதலிடத்தில் இல்லை. சாட் நகரின் தலைநகர் N'Djamena டாப் இடத்தில் இருக்கிறது. இருந்த போதிலும் டெல்லி, க்ரீட்டர் டெல்லி ஆகிய இரு நகரங்களும் இன்னும் டாப் 10 இடத்தில் இருக்கிறது.

குறையும் காற்று மாசு
மேலும், டெல்லியின் அண்டை நகரங்களான குருகிராம், நொய்டா, காசியாபாத் மற்றும் ஃபரிதாபாத் நகரங்களில் மாசு சரிவைக் கண்டுள்ளன.. குருகிராமில் 34 சதவீதம், ஃபரிதாபாத்தில் 21 சதவீதம் மாசு குறைந்துள்ளது. டெல்லியில் காற்று மாசு 8 சதவீதம் சரிந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 31 நகரங்களில் காற்று மாசு அளவு இரட்டை இலக்கத்தில் சரிந்துள்ளது. இதில் 10 உத்திர பிரதேசத்திலும், ஏழு ஹரியானாவிலும் உள்ளன. தாஜ்மஹால் உள்ள ஆக்ராவில் காற்று மாசு 55 சதவீதம் குறைந்துள்ளது. 2017-21க்கு காலகட்டத்தில் PM 2.5 மாசு 85 மைக்ரோகிராமாக இருந்த நிலையில், அது இப்போது 38 மைக்ரோகிராமாக குறைந்துள்ளது.

சென்னை நிலை
இந்தியாவில் பெருநகரங்களில் இருக்கும் காற்று மாசு என்பதைப் பார்த்தால் டெல்லியில் தான் அதிகம். டெல்லிக்கு அடுத்து கொல்கத்தா தான் காற்று மாசு அதிகமாக உள்ளது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. 2017 முதல் மாசு அளவு ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே அதிகரித்து வருகிறது. ஒப்பீட்டளவில் சென்னை தான் குறைந்த மாசடைந்த நகராக உள்ளது. சென்னை சர்வதேச அளவில் 682ஆவது இடத்தில் இருக்கிறது இருப்பினும், அங்கும் உலக சுகாதார அமைப்பின் காற்று மாசு அதிகமாகவே இருக்கிறது.

தெற்காசியா
சர்வதேச அளவில் பார்க்கும் போது அதிகம் மாசடைந்த டாப் 100 நகரங்களில் 72 நகரங்கள் தெற்காசியாவில் உள்ளன. இதில் பெரும்பாலான நகரங்கள் இந்தியாவில் இருக்கிறது. அதேபோல டாப் 10 நகரங்களில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசமும் இருக்கிறது. காற்று மாசு உலகளவில் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே இதனால் பாதிக்கப்படுகிறார்கள். சராசரி ஆயுள் கூட இதனால் குறைகிறது. இதனால் காற்று மாசை தடுக்க உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications