இந்தியாவில் கோதுமை தட்டுப்பாடா? இல்லவே இல்லை.. மத்திய உணவுத் துறை மறுப்பு.. பின்னணி என்ன?
டெல்லி: வெப்ப அலை உள்ளிட்ட பாதிப்புகளால் இந்தியாவில் கோதுமை பற்றாக்குறை உருவாகும் என்றும் இதனால் வெளிநாடுகளிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்படும் நிலை ஏற்படும் என்றும் சமீபத்தில் ஆய்வுகள் தெரிவித்திருந்தன.
Recommended Video
இந்நிலையில், இம்மாதிரியான கணிப்பிற்கு உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவில் கோதுமை கையிருப்பானது மாநிலங்களில் குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் காரணமாக சமீப நாட்களாக உணவு தானிய உற்பத்தியானது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பிரிட்டன் தொடங்கி பிரேசில் வரை காலநிலை மாற்றத்தால் காட்டுத்தீ, வெப்ப அலை என பல்வேறு இடர்பாடுகளை உலக நாடுகள் சந்தித்துள்ளன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கில்லை. கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய வெப்ப அலையானது இந்தியாவின் தானிய உற்பத்தியை குறிப்பாக கோதுமை உற்பத்தியை கடுமையாக பாதித்தது.

விலையுயர்வு
இதன் காரணமாக பெருமளவு விளைவிக்கப்பட்ட கோதுமைகள் அறுவடையை எட்டும் நிலையில் இந்த வெப்ப அலை தாக்கத்தால் முற்றிலும் வீணாக போனது. இந்த நிலையில்தான் உலகுக்கு உணவளிப்போம் என பிரதமர் முழக்கமிட்டார். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இது இத்துடன் நின்றுவிடாமல், சில்லறை வர்த்தகத்திலும் கோதுமையின் விலையும் உயர்ந்தது. கோதுமை கோடிக்கணக்கான இந்திய மக்களின் அன்றாட உணவாகும். இந்த விலையேற்றம் மக்கள் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறக்குமதி?
இந்நிலையில் கோதுமை இருப்பு குறித்து ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஏனெனில், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவில் மாநில அரசுகளிடம் தற்போது கோதுமை கையிருப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதனை இந்திய உணவு கழகத்தின் புள்ளிவிவரங்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில் நுகர்வோர் கோதுமை பணவீக்கம் 12% ஆக உள்ளது. இதனையடுத்து இந்த அச்சமூட்டும் குறைந்த அளவு கையிருப்பும், விலையேற்றமும் தற்போது கோதுமையை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய இந்திய அரசை தூண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

மறுப்பு
ஆனால் இந்த செய்திகளுக்கு மத்திய அரசு உறுதியான மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உணவு மற்றும் பொது விநியோகத்துறை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. நமது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு தானியம் கையிருப்பு உள்ளது. மற்றும் பொது விநியோகத்திற்கு தேவையான அளவு கோதுமை தானியத்தை இந்திய உணவுக் கழகம் கையிருப்பில் வைத்துள்ளது" என்று கூறியிருக்கிறது.

புதிய தலைவலி
முன்னதாக செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க், அதன் கருத்து கேட்கும் மின்னஞ்சலுக்கு நிதி அமைச்சகம் பதிலளிக்கவில்லை என்றும் உணவு மற்றும் வர்த்தக அமைச்சகங்களின் செய்தித் தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார் என்றும் செய்தி வெளியிட்டது. இதனையடுத்து இந்தியா வெளிநாடுகளிலிருந்து கோதுமை உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் என்று செய்திகள் வெளியாகின. ஏற்கெனவே நாட்டில் பணவீக்கம் 7%ஐ நெருங்கியுள்ள நிலையில் தற்போது கோதுமை பற்றாக்குறையால் விலை அதிகரித்தால் அது அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications