8 முறை வெற்றி, அவையின் மூத்த எம்பி! சபாநாயகர் தேர்தலில் காங். சார்பில் இறங்கும் கே சுரேஷ்! யார் இவர்
டெல்லி: வழக்கமாகத் துணைச் சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்குத் தரப்படும் நிலையில், இந்த முறை ஆளும் பாஜக அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் நமது நாட்டில் முதல்முறையாக லோக்சபா சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதில் பாஜக சார்பில் ஓம் பிர்லா போட்டியிடும் நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் கே சுரேஷ் போட்டியிடுகிறார். யார் இந்த சுரேஷ் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்து சபாநாயகர் யார் என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. துணைச் சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்குத் தர பாஜக ரெடியாக இல்லாத நிலையில், சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதில் ஆளும் என்டிஏ சார்பில் பாஜக சார்பில் ஓம் பிர்லா போட்டியிடும் நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் கே சுரேஷ் போட்டியிடுகிறார். யார் இந்த சுரேஷ் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கே சுரேஷ்: கேரளாவைச் சேர்ந்த கே சுரேஷ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவர்.. 1989 ஆண்டு முதல் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டுள்ள இவர் இதுவரை எட்டு முறை வெற்றி பெற்றுள்ளார். இரண்டு முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளார். அடூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 1989, 1991, 1996, 1999 ஆகிய தேர்தல்களில் கே சுரேஷ் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல 2009 முதல் இவர் கேரளாவின் மாவேலிக்கரா தொகுதியில் எம்பியாக இருந்து வருகிறது. கடந்த நான்கு தேர்தல்களில் மாவேலிக்கரா தொகுதியில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.
நடந்து முடிந்து லோக்சபா தேர்தலில் அடூர் தொகுதியில் போட்டியிட்ட கே சுரேஷ் 3.69 லட்சம் வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் அருண்குமார் 3.58 லட்சம் வாக்குகளைப் பெற்ற நிலையில், அவர் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் கேரளாவில் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் இவர் தான். கடந்த 2009- 2014 வரையிலான மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாவது யுபிஏ அரசில் இவர் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
பொறுப்புகள்: கடந்த 2021ஆம் ஆண்டில் கேரள காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்ட நிலையில், அப்போது இவரது பெயரும் பரிசீலனையில் இருந்தது. இப்போது காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளராகவும், காங்கிரஸின் கேரளப் பிரிவின் செயல் தலைவராகவும் இருக்கிறார். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) செயலாளராகவும் இவர் இருந்துள்ளார்
சர்ச்சை: கடந்த 2010இல், கேரள உயர் நீதிமன்றம் இவரைத் தகுதி நீக்கம் செய்திருந்தது. சுரேஷ் ஓபிசி பிரிவின் கீழ் வரும் சேரமர் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்ட சேரமர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றும் சிபிஐ வேட்பாளர் தொடர்ந்து வழக்கில் கேரள நீதிமன்றம் இவரைத் தகுதி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக லோக்சபாவின் மூத்த உறுப்பினர், அதாவது யார் அதிக முறை வெற்றி பெற்றுள்ளாரோ அவரை இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படுவார். அதன்படி பார்த்தால் 8 முறை வென்ற கே சுரேஷிற்கே இடைக்கால சபாநாயகர் பதவி வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாகத் தற்காலிக சபாநாயகராக பர்த் ருஹரி மஹ்தப்பை பாஜக அறிவித்தது.
தேர்தல் ஏன்: இதுவே நாடாளுமன்றத்தில் பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இதற்கிடையே தான் இப்போது சபாநாயகர் தேர்தலில் சுரேஷை எதிர்க்கட்சிகள் இணைந்து வேட்பாளராக அறிவித்துள்ளனர். வழக்கமாக சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடக்காது. ஆளும் தரப்பு முன்மொழியும் நபருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தரும். அதேநேரம் துணைச் சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும்.
ஆனால், இந்த முறை துணைச் சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்க ஆளும் தரப்பு ஒத்துக் கொள்ளாத நிலையில், வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications