தமிழக தலைமைச் செயலாளராக வேண்டியவர்.. பணமதிப்பிழப்பின் மூளை.. யார் இந்த சக்திகாந்த தாஸ்?
Recommended Video

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநராக தமிழக ஐஏஎஸ் கேடரை சேர்ந்த சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறையில் மூத்த அனுபவம் கொண்ட இவர், பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர்.
ஒடிசாவை சேர்ந்த, சக்திகாந்த தாஸ், 1980ம் ஆண்டு தமிழக ஐஏஎஸ் கேடர் அதிகாரியாகும். வரலாற்று பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சுமார் 40 வருட அரசு பணி அனுபவம் கொண்டவர், சக்திகாந்த தாஸ்.
தமிழ்நாடு தொழில் மற்றும் வருவாய் துறை செயலாளராக பணியாற்றிய சக்திகாந்த தாஸ், பிறகு மத்திய அரசு பணிக்கு அழைத்துக்கொள்ளப்பட்டார்.
[முன்னாள் தமிழக ஐஏஎஸ் அதிகாரி சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமனம் ]

நிதித்துறை
2008-2013ம் ஆண்டு காலத்தில், மத்திய நிதித்துறை அமைச்சக சிறப்பு செயலாளர், கூடுதல் செயலாளர் மற்றும் இணை செயலாளர் என பதவிகளை வகித்தார். முன்னதாக, செலவீனங்களுக்கான துறை பிறகு பொருளாதார விவகாரத்துறையில் பணியாற்றினார். இவையும் நிதித்துறையின்கீழ் வருபவைதான்.

பொருளாதார விவகாரத்துறை செயலாளர்
பட்ஜெட் தயாரிப்பில் மிகுந்த அனுபவம் பெற்றவரான சக்திகாந்த தாஸ், பிரதமர் மோடி தலைமையிலான அரசில் 2015-17ம் ஆண்டு காலகட்டத்தில், பொருளாதார விவகாரத்துறை செயலாளராக பணி புரிந்ந்தார். இந்த காலகட்டத்தில்தான், பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் காரணமாக பண மதிப்பிழப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

பதவி நீட்டிப்பு
பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு அவ்வப்போது மீடியாக்களில் தோன்றி, மக்கள் எப்படி பணத்தை பெறுவது என்பது தொடர்பான பல நெறிமுறைகளை கூறி வந்ததால் இந்தியா முழுவதும் இவரது முகம் பரிட்சையமானது. 2017ம் ஆண்டு, மார்ச் மாதத்தோடு பதவி காலம் நிறைவடைய இருந்த சக்திகாந்த தாஸுக்கு மே 31ம் தேதிவரை பதவி நீட்டிப்பு செய்தது மத்திய அரசு. மே 31ம் தேதியுடன், சக்திகாந்த தாஸ் ஓய்வு பெற்றார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர்
தற்போது இந்தியாவின் நிதி ஆணையக்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த சக்திகாந்த தாஸ், ஜி20 மாநாடுகளின் இநதியா சார்பிலான பங்கேற்பாளராகவும் உள்ளார். 63 வயதாகும், சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி ஆளுநராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்.

தலைமைச் செயலாளர்
இதில் ஒரு கொசுரு தகவல் என்னவென்றால், தமிழக தலைமை செயலராக இருந்த ராமமோகன்ராவ் அரசியல்வாதிகளுடன் கை கோர்த்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிக்கியதும், 2016ம் ஆண்டு டிசம்பர் மாதமே, தமிழக புதிய தலைமைச் செயலாளராக சக்திகாந்த தாஸை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்ததாகவும், ஆனால், அடுத்த ஆண்டே பணி மூப்படைய உள்ள நிலையில், தலைமைச் செயலாளர் பதவி வேண்டாம் என்று, அவர் கூறிவிட்டதாக ஒரு தகவல் உண்டு.












Click it and Unblock the Notifications