மோடி 3.0 அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம்? யார் யாருக்கு எந்த இலாக்கா? வெளியான முக்கிய தகவல்
டெல்லி: 3வது முறையாக நரேந்திர மோடி நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த முறை கூட்டணி ஆட்சி அமையும் நிலையில் மத்திய அமைச்சரவை தொடர்பான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
543 லோக்சபா தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பாஜகவுக்கு தனிமெஜாரிட்டிக்கான 272 சீட் கூட கிடைக்கவில்லை.

240 இடங்களில் மட்டுமே பாஜக வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜகவின் 240 சீட்டுகளுடன் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் 52 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் மத்தியில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
நாளை இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இதன்மூலம் 3 முறை தொடர்ந்து பிரதமரானார் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை சமன் செய்ய உள்ளார். இந்நிலையில் தான் தற்போது பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருந்தது. இதனால் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு அமைச்சரவையை அமைத்தனர். ஆனால் இந்த முறை கூட்டணி கட்சிகளின் தயவில் தான் பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பில் நீடிக்க வேண்டும். இதனால் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம், சிராக் பஸ்வான் கட்சிகள் சார்பில் பாஜக தலைமையிடம் மத்திய அமைச்சர் பதவி கேட்கப்பட்டது.
அதன்படி தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்பிக்கள் உள்ளதால் 3 முதல் 4 மத்திய கேபினட் அமைச்சர் பொறுப்பையும் ஒரு மத்திய இணை அமைச்சர் பொறுப்பையும் கேட்டுள்ளதாகவும், நிதிஷ் குமார் 3 கேபினட் அமைச்சர் பொறுப்பு, ஏக்நாத் ஷிண்டே ஒரு கேபினட், 2 மத்திய இணையமைச்சர், சிராக் பஸ்வானின் எல்ஜேபி (ராம் விலாஸ்) ஒரு கேபினட் ஒரு மத்திய இணையமைச்சர் பொறுப்பை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மஞ்சி தனக்கு கேபினட் அமைச்சர் பொறப்பையும், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி ஒரு கேபினட் அமைச்சர் பொறுப்பையும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி கட்சியினர் நீர்ப்பாசனத்துறை, நகர வளர்ச்சித்துறை, ரயில்வே, விவசாயம், ஊரக வளர்ச்சி, ஜல் சக்தி, சுகாதாரம் உள்ளிட்ட கேபினட் அமைச்சரர் பொறுப்புகள் மீது கூட்டணி கட்சிகள் கண்வைத்துள்ளன.
இந்நிலையில் தான் யாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுப்பது? எந்தெந்த இலாக்காக்களை பாஜக வைத்து கொள்ளும்? எந்தெந்த இலாக்காக்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும்? என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதால் இன்றைய தினம் மத்திய அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள், கட்சிகளின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து மத்திய அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பான மீட்டிங் இன்று மாலையில் நடைபெற உள்ளது. இந்த மீட்டிங்கில் மத்திய அமைச்சரவையில் மொத்தம் எத்தனை பேர் இடம் பெற உள்ளனர்? பாஜகவை சேர்ந்தவர்களுக்கு எத்தனை இடம்? கூட்டணி கட்சியினருக்கு எத்தனை இடம்? என்பது தெரிந்து விடும். இதனால் இன்றைய கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications