கவனம் மக்களே! இனி போலி செய்தியை பரப்பினாலே ஜெயில்.. புதிய கிரிமினல் சட்டத்தில் மத்திய அரசு அதிரடி
டெல்லி: மத்திய அமைச்சர் அமித் ஷா லோக்சபாவில் அறிமுகப்படுத்திய சட்ட மசோதாவின்படி, போலி செய்திகளை பரப்பினால் கடுமையான தண்டனை விதிக்கப்பட இருக்கிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
போலி செய்திகள் இப்போது நமக்கு மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. உண்மையைக் காட்டிலும் பொய் 100 மடங்கு வேகமாகப் பரவுவதால் அதைச் சமாளிப்பதே மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது.

மணிப்பூர் கலவரம் கூட போலி செய்திகளின் காரணமாகவே இந்தளவுக்கு மிக மோசமாக மாறியது. போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு இப்போது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறது.
மசோதா: கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று, பல புதிய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன.. குறிப்பாக 160 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டன.
குறிப்பாக இந்தியத் தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியச் சாட்சிய சட்டம் ஆகியவற்றையும் மாற்றும் புது சட்டம் கொண்டு வரப்பட்டது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, பாரதிய சக்ஷவா மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது.

3 ஆண்டுகள் சிறை: அதேபோல பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்த முன்மொழியப்பட்ட புது சட்டத்தின் கீழ் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் போலி செய்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்புவோருக்குச் சட்டப்பிரிவு 195இன் கீழ் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். .
இந்த சட்டப்பிரிவு பிரிவு 195 (1) dஇன் படி, "இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தவறான அல்லது பொய்யான தகவல்களை வெளியிடுவது அல்லது பரப்பினால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை: 'பொது அமைதிக்கு எதிரான குற்றங்கள்' என்ற பிரிவின் கீழ் இந்த மசோதாவில் அத்தியாயம் 11-ன் கீழ் இந்த முன்மொழியப்பட்ட சட்டம் இருக்கிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 153பி பிரிவின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவைக் கொண்டு வரும் போது பேசிய அமைச்சர் அமித் ஷா, "இந்தியா மக்களுக்கு நீதி வழங்குவது.. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்த மூன்று மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளோம்.. அடிமைத்தனத்தின் அனைத்து அறிகுறிகளையும் நீக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் கூறியிருந்தார். அதை நிறைவேற்றவே இதைச் செய்கிறோம்.
இந்தியத் தண்டனைச் சட்டம், 1860க்கு பதிலாகப் பாரதிய நியாய சன்ஹிதா மசோதா 2023; குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898க்குப் பதிலாகப் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா மற்றும் இந்தியச் சாட்சியச் சட்டம், 1872க்கு பதிலாகப் பாரதிய சாக்ஷ்யா மசோதா கொண்டு வரப்படும்" என்று அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். இந்தியத் தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், மற்றும் இந்தியச் சாட்சிய சட்டம் ஆகிய மூன்றுக்குப் பதிலாக இந்த புதிய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications