கழற்றிவிடப்பட்ட கெஜ்ரிவால்.. ஸ்டாலின், தாக்கரேவிற்கு அழைப்பு.. சோனியா முடிவிற்கு என்ன காரணம்?
டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் முன்னெடுப்பில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி கழட்டிவிடப்பட்டு இருக்கிறது. பாஜகவிற்கு எதிராக வலுவாக எதிர்க்கட்சிகள் அழைக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படாதது கேள்விகளை எழுப்பி உள்ளது.
அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு குடைக்கு கீழ் திரண்டு வருகின்றன. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக திரண்டு வந்து பாஜகவை எதிர்த்தது. நீண்ட காலத்திற்கு பின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஒற்றுமையாக செயல்பட்டு மொத்தமாக நாடாளுமன்ற பணியையே முடக்கியது.
எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமை ஒருவகையில் பாஜகவை தடுமாற செய்து இருக்கிறது. அதிலும் பல்வேறு மாநில முதல்வர்கள் பாஜகவிற்கு எதிராக திரண்டு உள்ளன. காங்கிரஸ் கட்சியும் தனக்கு இருந்த ஈகோவை விட்டுவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது.

சந்திப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சோனியா, ராகுல் ஆகியோர் சந்திப்பு நடத்தினார்கள். அதோடு தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டு வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியை புதுப்பிப்பதிலும் எதிர்கட்சிகளை ஒரு குடைக்குள் கொண்டு வருவதிலும் இவர் முக்கிய மூளையாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் கூட்டம்
இந்த நிலையில்தான் இன்று மாலை எதிர்க்கட்சிகளின் கூட்டம் சோனியா காந்தியின் அழைப்பின் பெயரில் நடக்கிறது. மொத்தம் 18 எதிர்க்கட்சிகளுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளாத மாநில முதல்வர்கள், பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகள் என்று 18 கட்சிகளுக்கு சோனியா காந்தி மூலம் அழைப்பு சென்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் முக்கியமான தலைவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

வேறு யார்
அதேபோல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ராஷ்டிரிய ஜனதா தளம் லாலு யாதவ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், நேஷனல் கான்பிரன்ஸ் உமர் அப்துல்லா, அகாலி தளம் கட்சி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தேசிய தலைவர் தேவ கவுடாவிற்கும் அழைப்பு சென்றுள்ளது. உத்தர பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும் அழைப்பு சென்றுள்ளது. ஆனால் இவர் மீட்டிங்கிற்கு செல்வது இன்னும் உறுதியாகவில்லை.

அழைப்பு இல்லை
அதே சமயம் எதிர்க்கட்சிகளின் முக்கியமான கட்சியாக பார்க்கப்படும் ஆம் ஆத்மி கட்சிக்கோ டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கோ அழைப்பு செல்லவில்லை. எதிர்க்கட்சி தலைவர்களில் முக்கியமான நபராக, முதல்வராக பார்க்கப்படும் இவருக்கு அழைப்பு செல்லாதது ஏன் கேள்விகளை எழுப்பி உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மீட்டிங் நடக்க உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் தரப்போ மற்ற எதிர்கட்சிகளோ அழைப்பு விடுக்கவில்லை.

காரணம் என்ன?
ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் இந்த கூட்டத்திற்கு அழைக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆம் ஆத்மியுடன் ஒரே மேடையை பகிர (ஆன்லைன் மீட்டிங்காக இருந்தாலும்) பகிர்ந்து கொள்ள சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் வேறு சில மாநில முதல்வர்களும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அவர்கள் அழைக்கப்படவில்லை என்று காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

வாய்ப்பு
அதேபோல் பாஜகவை ஆம் ஆத்மி அவ்வளவு வலுவாக எதிர்க்காததும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மொத்தமாக எதிர்க்கட்சிகளின் குழுவில் இருந்து ஆம் ஆத்மி கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிடப்படுவதற்கான அறிகுறி இதுவோ என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications