டெல்லியில் இருந்து அமெரிக்கா சென்ற விமானம்! திடீரென ரஷ்யா பக்கம் சென்றதால் பரபரப்பு! என்னாச்சு
டெல்லி: அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் பயணிகளுடன் திடீரென ரஷ்யா பக்கம் சென்றுள்ளது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நமது நாட்டில் விமானத் துறை வளர மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. இங்கே இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கொரோனா காலம் தவிர மற்ற ஆண்டுகளில் விமான பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இப்போது மக்கள்தொகையில் ஒரு பகுதியினர் மட்டுமே விமானங்களை அடிக்கடி பயன்படுத்தும் நிலையில், இது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமான துறை வேகமாக வளர்ந்து வருகிறது.
விமானங்கள்: இதன் காரணமாகவே அமெரிக்கா, ஐரோப்பிய நகரங்களுக்கும் இந்திய நகரங்களில் இருந்து நேரடியாக விமானங்கள் இயக்கப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் கடந்த சில காலமாக இந்திய விமான துறை குறித்து வெளியாகும் செய்திகள் நல்லதாக இல்லை. இது மக்களை விமானத்தில் பயணிப்பது குறித்து ஒரு முறைக்கு இரண்டு முறை வைப்பதாகவே இருக்கிறது.
இதற்கிடையே மற்றொரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக விமானத்தை ரஷ்யாவுக்குத் திருப்பி விட்டுள்ளனர். அந்த விமானம் ரஷ்யாவில் உள்ள மகதன் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கியுள்ளது.
என்ன காரணம்: இந்த விமானத்தில் மொத்தம் 216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஏர் இந்தியா தரப்பில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம் ஏஐ173 விமானத்தின் இன்ஜின் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
அந்த விமானத்தில் அப்போது 216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்த நிலையில், அவர்களின் நலன் கருதி விமானம் திருப்பி விடப்பட்டது. அதன்படி அந்த விமானம் ரஷ்யாவில் உள்ள மகடன் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. மேலும், விமானத்தில் இருந்த பயணிகள் அங்கேயே தங்கத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் அவர்களின் இடங்களுக்குச் சென்று சேர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
மேலும், விமானத்தில் என்ன பிரச்சினை என்பதைக் கண்டறியவும் தேவையான சோதனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல அங்கே சிக்கியுள்ளவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர ரிசர்வ் விமானத்தைத் தரையிறக்கவும் ஏர் இந்தியாவுக்கு அனுமதி வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர்கள் விரைவாக அங்கிருந்து அழைத்து வரப்படுவார்கள் எனத் தெரிகிறது.
மக்கள் அச்சம் ஏன்: அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு என்றும் சுமுகமாக இருந்தது இல்லை. அதிலும் உக்ரைன் போருக்குப் பின்னர் நிலைமை மிகவும் மோசமாக மாறிவிட்டது. இந்தச் சூழலில் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டிய விமானம் திடீரென ரஷ்யாவுக்குச் சென்றதால் உள்ளே இருந்த பயணிகள் சற்றே பதற்றமடைந்தனர். இருப்பினும், பைலட் எதற்காக விமானம் ரஷ்யாவுக்குச் செல்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியிருந்ததால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications