பான் கார்டு- ஆதார் இணைப்பு ஏன் கட்டாயம்.. இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்! மார்ச் 31 கடைசி நாள்
ஒரே நபர் பல பான் கார்டுகளை பெற்ற நிகழ்வுகள் நடந்த நிலையில், இதை ஒழிக்கவே பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்தது.
டெல்லி: வரும் மார்ச் 31க்குள் பான் மற்றும் ஆதாரை இணைத்தாக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்.. இணைப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
வரும் மார்ச் 2023க்குள் பொதுமக்கள் அனைவரும் தங்கள் பான் கார்டுடன் ஆதாருடன் இணைக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கேட்டுக் கொண்டுள்ளது. அப்படி இணைக்கப்படாத பான் கார்டுகள் ஏப்ரல் 1ஆம் தேதி செயலிழந்துவிடும்.
பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியும் புதன்கிழமை முதலீட்டாளர்கள் அனைவரும் டிரேட்களை தொடர்ந்து செய்ய இந்த மாத இறுதிக்குள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

பான் கார்டு
தனி நபர் ஒருவருக்கு ஒரு பான் கார்டு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இருப்பினும், ஒரே நபர் பல ஆவணங்களைக் கொடுத்துப் பல பான் கார்டுகளை பெற்ற நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்தன. இது வெளிச்சத்திற்கு வந்த பிறகு, இதை ஒழிக்கவே பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்தது. அதேபோல வருமான வரி செலுத்துவோர், பான் மற்றும் வருமானத்திற்கான விண்ணப்பப் படிவத்தில் தனது ஆதாரை குறிப்பிடுவதும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆதார் மற்றும் பான் எண்
இது தொடர்பாக மார்ச் 2022இல் சிபிடிடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஜூலை 1, 2017 வரை பான் ஒதுக்கப்பட்ட அனைத்து நபர்களும் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதை வருமான வரிச் சட்டம் கட்டாயமாக்குகிறது. மார்ச் 31, 2023இல் பான் மற்றும் ஆதாரை இணைக்க வேண்டும். இல்லையெனில் பான் செயலிழக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேநேரம் சிலருக்கு இதில் இருந்து விதிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 80 வயதைக் கடந்தவர்கள், இந்தியக் குடிமகனாக இல்லாத ஒருவர் ஆதார் மற்றும் பானை இணைக்கத் தேவையில்லை.

செயலிழந்துவிடும்
ஆதார் பானை இணைக்கத் தவறினால், பான் செயலிழந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒருவரால் பான் கார்டை எங்கும் குறிப்பிட முடியாது. அதன் பிறகு வருமான வரிச் சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அவரே பொறுப்பு. மேலும், செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி ஒருவர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.. மேலும், நிலுவையில் உள்ள ரிட்டன்களை பெற முடியாது. செயல்படாத பான் கார்டுகளுக்கு இவை கிடைக்காது. இவர்களுக்கு அதிகப்படியான வரி பிடிக்கப்படும். இது தவிர நிதி பரிவர்த்தனைகளிலும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

செபி அமைப்பு
அதேபோல பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியும், KYC தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள அனைத்து முதலீட்டாளர்களும், சுமுகமாகப் பரிவர்த்தனைகளைத் தொடர மார்ச் 31, 2023க்கு முன், தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அப்படி ஆதார் பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது என்றும் செபி அறிவித்துள்ளது

இணைப்பது எப்படி
வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.incometax.gov.in இல் உள்ள இணைப்பு ஆதார் ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம் ஒருவர் பான் மற்றும் ஆதாரை இணைக்க முடியும். அந்த இணைப்பை களிக் செய்து அதில் வரும் எளிமையான ஸ்டேப்ஸ்களை பயன்படுத்தி மிக எளிதாக ஆதாரையும் பான் கார்டையும் இணைக்க முடியும்.












Click it and Unblock the Notifications