"நோ யூஸ்.." இந்திய வங்கிகளில் பல லட்சம் கோடி ரஷ்ய சொத்து! எடுக்கவே முடியாதாம்! தீர்வுதான் என்ன
டெல்லி: இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வரும் நிலையில், ரூபாயில் வர்த்தகம் செய்வது தொடர்பாக ரஷ்யா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே நல்ல உறவே இருந்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் நமக்கு ஆதரவாக இல்லாத நேரத்திலும் ரஷ்யா நமக்கு ஆதரவாகவே இருந்துள்ளது.
இப்போதும் கூட மேற்கத்திய நாடுகளுடன் எப்படியொரு உறவை வைத்துள்ளோமோ.. அதே அளவுக்கு ரஷ்யா உடனும் நல்ல உறவை வைத்துள்ளோம். உக்ரைன் போர் சமயத்திலும் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்திருந்தது.

நல்ல உறவு: அதன் பிறகும் இரு நாடுகளுக்கும் இடையே நல்ல ஒரு உறவே இருந்து வருகிறது. இதனிடையே ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ள சில கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பொதுவாகச் சர்வதேச நாடுகளுக்கு இடையே வர்த்தகம் டாலரில் தான் நடக்கும். ஆனால், இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டன.
அதன்படி இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் இப்போது இந்திய ரூபாயிலேயே நடந்து வருகிறது. இதனிடையே இந்திய வங்கிகளில் ரஷ்யாவுக்குப் பல பில்லியன் கணக்கான ரூபாய் இருப்பதாகவும் இருப்பினும் அதைப் பயன்படுத்த முடியாத சூழலே நிலவுவதாகவும் தெரிவித்தார். இது நமது நாட்டின் ஏற்றுமதி சூழல் எப்படி இருக்கிறது என்பதைக் குறிப்பதாக உள்ளது.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இது ஒரு பிரச்சனை. நாங்கள் இந்தப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இப்போதைக்கு அதற்கான வழி தெரியவில்லை. எனவே, இந்த ரூபாய் நோட்டுகளை வேறு நாணயமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்றார்.
என்ன பிரச்சினை: 2022-23 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் ரஷ்யாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 11.6% குறைந்து $2.8 பில்லியனாக இருக்கிறது. மறுபுறம் இறக்குமதி சுமார் ஐந்து மடங்கு உயர்ந்து $41.56 பில்லியனாக இருக்கிறது.
உக்ரைன் போருக்குப் பிறகு பல உலக நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய்க்குத் தடை விதித்த நிலையில், தள்ளுபடி விலையில் இந்தியா கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து பெற்றது. இதுவே இறக்குமதி அதிகரிக்கக் காரணமாக அமைந்தது. அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி தினசரி 1.68 மில்லியன் பீப்பாய் வரை சென்றது. இது முந்தைய ஆண்டை விட ஆறு மடங்கு அதிகமாகும்.
ரஷ்ய வங்கிகள் மீது தடை விதிக்கப்பட்டதால் ஆரம்பத்தில் இந்திய கரண்சிகளை பயன்படுத்த ரஷ்யா ஊக்குவித்தது. ஆனால் போர் தொடங்கிய உடனேயே ரஷ்ய நாணயமான ரூபிளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் எண்ணெய் இறக்குமதியை ரூபாய்-ரூபிள் மூலம் செய்யும் திட்டத்தைக் கைவிட வைத்தது.

இந்தியாவில் இருக்கும் ரஷ்யாவின் பணம் என்பது பல பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இந்தியா வரலாற்று ரீதியாக எப்போதும் வர்த்தகப் பற்றாக்குறை கொண்டிருப்பதால் இதில் மூன்றாம் நாடுகள் தலையிடும் வாய்ப்பை குறைக்கிறது.
தீர்வு என்ன: இந்தியாவின் மிகப்பெரிய ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களின் சப்ளையராக ரஷ்யாவே இருக்கிறது. 2 பில்லியனுக்கும் அதிகமான ஆயுதங்களுக்கான பணத்தை ரஷ்யாவுக்கு இந்தியா தர வேண்டும். ஓராண்டாக இது அப்படியே தேங்கியுள்ளது மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையால் டாலரில் பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல இந்திய ரூபாயை வாங்க ரஷ்யாவும் தயக்கம் காட்டுகிறது.
மறுபுறம் ரஷ்யாவின் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம்கள், ரூபிள் மூலம் கச்சா எண்ணெய்க்கான பணத்தைச் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications