4 காரணங்கள்.. அடுத்தடுத்த டாப் லெவல் மீட்.. திடீரென டெல்லி பறக்கும் ஆளுநர் ரவி.. என்ன பின்னணி?
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இன்று மாலை டெல்லி செல்ல இருக்கிறார். 4 முக்கியமான காரணங்களுக்காக அவர் டெல்லி செல்ல உள்ளதாக ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு ஆளுநராக ஆர். என் ரவி நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வரிசையாக பல்வேறு மீட்டிங்குகளை நடத்தினார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஆளுநரை கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்தனர்.
அதன்பின் மறுநாளே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து நேற்று முதல்நாள் ஆளுநர் ஆர்என் ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார்.

அண்ணாமலை
கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் ஆர்என் ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். இதில் தமிழ்நாட்டில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து இவர் பேசியதாக கூறப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து மனு அளித்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். திமுக எம்பி ரமேஷ் மீதான கொலை வழக்கு, பாஜக நிர்வாகியை தாக்கியது தொடர்பாக திமுக எம்பி ஞானதிரவியம் மீதான வழக்கு என்று பல விஷயங்கள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

மறுநாள் சந்திப்பு
இந்த சந்திப்பு நடந்த மறுநாளே முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். அதிகாரபூர்வமாக வெளியான தகவலின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க செல்வதாக கூறப்படுகிறது. அதே சமயம் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், உளவு தகவல்கள் குறித்தும், தமிழ்நாட்டில் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டது குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்பட்டது.

மீண்டும் சந்திப்பு
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தார். அதிமுக மூத்த தலைவர்களுடன் சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அவரிடம் புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்து உள்ளது. இதை பற்றி ஆளுநரிடம் விளக்கமாக பேசி இருக்கிறோம். ஆளுநரிடம் இது தொடர்பாக மனு அளித்து இருக்கிறோம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பலர் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் புகார் கொடுக்க சென்ற போது அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இதை பற்றி முறையிட்டு இருக்கிறோம் என்று ஆளுநர் சந்திப்பிற்கு பின் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

டெல்லி
இந்த நிலையில்தான் அடுத்தடுத்த டாப் லெவல் சந்திப்புகளுக்கு பின்பாக இன்று ஆளுநர் ஆர். என் ரவி டெல்லி செல்ல இருக்கிறார். பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்ற பிரதமர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து இவர் ஆலோசனை செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.4 முக்கியமான காரணங்களுக்காக அவர் டெல்லி செல்ல உள்ளதாக ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காரணம் என்ன
காரணம் 1. உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக தரப்பு அளித்த புகார் குறித்து ஆளுநர் டெல்லி தரப்பில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்பட்ட விதம், மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, ஆளும் கட்சியின் செயல்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆளுநர் டெல்லி தலைவர்களிடம் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காரணம் 2. தமிழ்நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, உளவு தகவல்கள் குறித்தும் இவர் அமைச்சர்அமித் ஷா ஆகியோரிடம் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்கள்
ஆளுநர் ஆர். என் ரவி முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஆவார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் டாப் உளவு தகவல்கள், இந்திய பெருங்கடலில் சீனா, இலங்கையின் அத்துமீறல், கடலோர பகுதிகளின் பாதுகாப்பு குறித்த விவரங்களையும், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் குறித்தும் ஆளுநர் இந்த சந்திப்பின் போதும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் 3. நிலக்கரி தட்டுப்பாடு அகில இந்திய அளவில் நிலவி வரும் நிலையில், நிலக்கரி வாங்க ஒப்பந்தம் செய்வது தொடர்பாக ஆளுநர் டெல்லி தரப்பில் பேச உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

வேறு காரணம்
காரணம் 4. அதேபோல் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த புகார்கள் குறித்தும் ஆளுநர் டெல்லியில் ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் அரசு மூலம் வாங்கப்பட்ட புதிய பேருந்துகள், அதன் கொள்முதல் விவரம், போலீசார் தாக்குதல், மின்சார ஒப்பந்தங்கள் தொடர்பான பல்வேறு விபரங்களுடன் தமிழக ஆளுநர் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications