டெல்லிக்கே பறந்த புள்ளி.. பீகாரில் நடந்த ட்விஸ்ட்டால்.. அறிவாலயத்திற்கு வண்டியை விடும் பாஜக? போச்சே!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக இதில் எப்படியாவது பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெற்றிபெற முயன்று வருகிறது. ஆனால் வடஇந்திய அரசியலில் ஏற்பட்ட சில மாற்றங்கள் பாஜகவிற்கு எதிராக திரும்பும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடியும் நிலையில், இந்த வருடம் ஜூலை மாதம் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 51 சதவிகித வாக்குகள், அல்லது அதற்கு கூடுதலாக வாக்குகள் பெறும் நபர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
இந்த முறை பாஜக கூட்டணிக்கு எம்பி, எம்எல்ஏ எல்லாம் சேர்த்து 5.42 லட்சம் வாக்குகள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் திமுக, காங்கிரஸ் எல்லாம் சேர்த்து 4.49 லட்சம் வாக்குகள் கொண்டு உள்ளன.

பாஜக பெரும்பான்மை
இந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தமாக 10.98 லட்சம் வாக்குகள் உள்ளன. இதில் பாதி, அதாவது 5.49 லட்சம் வாக்குகள் பெற்றால் வெற்றி பெற முடியும். ஆனால் பாஜகவிற்கு கணக்குப்படி 7 - 8 ஆயிரம் வாக்குகள் வரை குறைவாக உள்ளது. ஒரு எம்பியின் வாக்கு எண்ணிக்கை 708 ஆகும். பாஜகவிற்கு வேறு கட்சியில் இருந்து 10-15 எம்பிக்கள் ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்போதுதான் பாஜக நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெற முடியும்.

பாஜக ஐக்கிய ஜனதா தளம்
இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவிற்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அக்கட்சி ஆதரவு தந்தால் பாஜக வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிதான் ஆட்சியில் இருக்கிறது. ஆனால் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இடையே கடந்த சில மாதங்களால் மோதல் நிலவி வருகிறது. இவர்கள் கூட்டணியில் நிறைய கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. ஐக்கிய ஜனதா தளம் கட்சி மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம்
ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கமான ஆர்சிபி சிங் மத்திய அமைச்சரவையில் இரும்பு துறை அமைச்சர் பதவியில் இருக்கிறார். நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஆர்சிபி சிங் தற்போது மீண்டும் எம்பி ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆர்சிபி சிங் - நிதிஷ் குமார் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜகவிடம் மிகவும் நெருக்கமாக இருந்ததால் ஆர்சிபி சிங் மீதி நிதிஷ் குமார் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.

நிதிஷ் குமார்
பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களின் அமைச்சரவையில் இருக்கும் ஆர்சிபி சிங் மீதும் நிதிஷ் குமார் கோபமாக இருக்கிறாராம். இதனால் அவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவியையும் நிதிஷ் குமார் மறுத்துள்ளார். மாறாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கிரோ மஹாட்டோவிற்கு ராஜ்ய சபா எம்பி தேர்தலில் போட்டியில் நிதிஷ் குமார் வாய்ப்பு வழங்கி உள்ளார். இதனால் எம்பியாக இருக்கும் ஆர்சிபி சிங்,.. எம்பி பதவியையும், அமைச்சர் பதவியையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வெட்ட வெளிச்சம்
பாஜக - நிதிஷ் குமார் இடையிலான மோதல்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதல் தற்போது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. ராஜ்ய சபா எம்பி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்பதால் இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச அமைச்சர் ஆர்சிபி சிங் இன்று டெல்லி சென்றுள்ளார். ஆர்சிபி சிங் ராஜ்ய எம்பி ஆவது கஷ்டம் என்றே கூறப்படுகிறது. பீகாரில் நடக்கும் இந்த மோதல் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கிறார்கள்.

மோதல்
அதாவது பாஜகவிற்கு ஐக்கிய ஜனதா தளம் வாய்ப்பு வழங்காது என்றே கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பாஜக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு தேடி அறிவாலயம் பக்கம் வண்டியை விடும் வாய்ப்புகளும் உள்ளன. ஏனென்றால் திமுகவிடம் 24 லோக்சபா எம்பிக்கள் உள்ளனர். ஏற்கனவே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு போட்டியிட போவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதோடு அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்த காரணத்தால், திமுக வெங்கையா நாயுடுவுக்கு குடியரசுத் தலைவராக ஆதரவு அளிக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுக பாஜக
திமுகவின் ஆதரவை பாஜக நாட வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் ஐக்கிய ஜனதா தளமுடன் பாஜக மோதலில் உள்ளது. திரிணாமுல், சிபிஐ, சிபிஎம், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் பாஜக நிறுத்தும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க வாய்ப்பு குறைவு. ஆகவே பாஜக திமுகவின் ஆதரவை கேட்கும் வாய்ப்புகள் உள்ளன. திமுக ஆதரவு கொடுக்காத பட்சத்தில் பிஜு ஜனதா தளம் (இன்று நவீன் பட்நாயக் டெல்லி செல்கிறார்), தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளின் ஆதரவை பாஜக பெற முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications