விமான சேவைகளை 10% குறைத்த இண்டிகோ.. பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? சமாளிக்குமா போட்டி நிறுவனங்கள்!
டெல்லி: இண்டிகோ விமான நிறுவனம் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடர் விமான ரத்தால் ஏற்பட்ட பயண இடையூறுகளை அடுத்து, இண்டிகோ தனது விமானச் செயல்பாடுகளில் 10% குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இண்டிகோ விமான சேவைகள் 10 சதவீதம் குறைக்கப்பட்டால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறைக்காலம் என்பதால் இந்த முடிவு முக்கிய வழித்தடங்களின் அளவை குறைத்து, பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் கடந்த சில நாட்களாக பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. டெல்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடர் விமான ரத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
டிசம்பர் 10-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
இதனையடுத்து, இண்டிகோ தனது விமானச் சேவைகளில் 10% குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாரத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்தாகி, ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டதால், நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனம் மீது இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, இண்டிகோ தனது திருத்தப்பட்ட அட்டவணையை டிசம்பர் 10-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னரே குறைக்கப்பட்ட சேவை அமலுக்கு வரும். விடுமுறைக்காலம் என்பதால் இந்த முடிவு முக்கிய வழித்தடங்களின் அளவை குறைத்து, பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள முன்பதிவுகள் கொண்ட பயணிகளுக்கு டிசம்பரில் குறைவான இடையூறுகளே இருக்கும், ஏனெனில் சேவை குறைப்பு படிப்படியாக அமலாகும் என தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்
இருப்பினும், வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டு, விமான சேவைகள் குறையும் என்பதால், ஆண்டின் பரபரப்பான பயணக் காலத்தில் அசௌகரியங்கள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. விமானக் கட்டண உயர்வு தடுக்கப்படும் நோக்கில், இண்டிகோவின் ரத்து செய்யப்பட்ட விமானங்களை மற்ற நிறுவனங்கள் ஏற்கும்படி விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் கோரியுள்ளது.
ஆனால், பெரும்பாலான விமான நிறுவனங்களுக்கு விமானம் அல்லது பணியாளர் பற்றாக்குறை உள்ளதால், இது கடினம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். சில நிறுவனங்களால் மட்டுமே விரைவாக சேவைகளை அதிகரிக்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) இரண்டு போயிங் 737 விமானங்களைச் சேர்த்து, தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் சேவைகளை அதிகரித்தது. இந்த அறிவிப்பால் அதன் பங்குகள் நேற்று 8% உயர்ந்தன.
பணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறை
டிசம்பர் 6 வரை ரத்தான விமானங்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறை முடிந்ததாகவும், மீதமுள்ளவை அவசரமாகக் கையாளப்படுவதாகவும் இண்டிகோ நிறுவனம் அரசுக்குத் தெரிவித்துள்ளது. விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியதுடன், ஒழுங்குமுறை ஆணையங்களுடன் இணைந்து செயல்பாடுகளைச் சீராக்கி வருவதாகவும் கூறியது.
ரத்து அறிவிக்கப்பட்டும், முன்பதிவு அமைப்புகள் புதுப்பிக்கப்படாததால் குழப்பம் நிலவியது. இதனால் சிலருக்குப் பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் உறுதிப்படுத்தல்கள் வந்ததும், பெரும்பாலான பணம் திரும்பப் பெறும் செயல்முறைகள் முடிவடைந்ததாக முன்பதிவு தளங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications