ரைட்டு! ஒரு பக்கம் ஆட்குறைப்பு செஞ்சா.. மறுபுறம் முடங்கிய ட்விட்டர்! என்ன செய்ய போகிறார் எலான் மஸ்க்
டெல்லி: பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் பல பயனாளர்கள் சிக்கல்களை எதிர்கொண்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எலான் மஸ்க் எப்போது தான் ட்விட்டரை வாங்குவார் என்று பெரும் எதிர்பார்ப்பே ஏற்பட்டது. அந்தளவுக்கு எலான் மஸ்க் ட்விட்டர் டீலிங்கில் பல ட்விஸ்ட்களும் திருப்பங்களும் அரங்கேறி வந்தன.
முதலில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதால் ட்விட்டரை வாங்க மாட்டேன் என மஸ்க் அறிவித்தார். இதை எதிர்த்து வழக்கு தொடர்வதாக போர்ட் மிரட்டிய நிலையில், ட்விட்டரை வாங்க ஒப்புக் கொண்டார்.

எலான் மஸ்க்
அதன்படி கடந்த வாரம் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்கினார். மொத்தம் 44 மில்லியன் டாலருக்கு அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதாவது ஒவ்வொரு ஷேருக்கும் கிட்டதட்ட 50 டாலரை அவர் கொடுத்துள்ளார். இவ்வளவு பெரிய தொகைக்கு எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ள நிலையில், ட்விட்டரை மாற்ற அவர் ஏற்கனவே பல அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார்.

முடக்கம்
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், ஒரே வாரத்தில் இப்போது ட்விட்டரில் பயனாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் பல பயனாளர்களால் ட்விட்டர் தளத்திலேயே லாக்இன் செய்ய முடியவில்லையாம். ட்விட்டர் தளத்திற்குள் நுழைய முயலும் நபர்களுக்கு "Something went wrong" என்ற மெசேஜே திரும்பத் திரும்ப வருவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

உலகெங்கும்
இது குறித்து ட்விட்டர் யூசர் ஒருவர் கூறுகையில், "ட்விட்டரில் என்னால் லாக்இன் கூடச் செய்ய முடியவில்லை. Something went wrong என்ற மெசேஜ் தான் திரும்பத் திரும்ப வருகிறது. இருப்பினும், இப்போது தான் மஸ்க் கைகளில் ட்விட்டர் சென்றுள்ளது. இதனால் நாம் அவர்களுக்குக் கொஞ்சக் காலம் வாய்ப்பு தருவதில் எந்தவொரு தவறும் இல்லை" என்று பதிவிட்டு உள்ளார். இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் இந்த பிரச்சினை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எப்போது
காலை 3 மணியளவில் இந்த பிரச்சினை முதல்முறையாக ஏற்பட்டுள்ளது. முதலில் சிலருக்கு மட்டுமே இந்தப் பிரச்சினை நிலவிய நிலையில், காலை 7 மணிக்குப் பின், அதிகப்படியான பயனாளர்கள் இந்த பிரச்சினையை எதிர்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் இந்த பிரச்சினை குறித்து ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து எந்தவொரு விளக்கம் இதுவரை தரப்படவில்லை.

பணி நீக்கம்
முன்னதாக கடந்த வாரம் தான் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய சில நாட்களிலேயே டாப் அதிகாரிகளை வேலையைவிட்டு நீக்கினார். மேலும், ட்விட்டர் நிறுவனத்தை லாபகரமானதாக மாற்றி அமைக்கவும் அவர் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளார். குறிப்பாக, ப்ளூடிக் வசதியைப் பெற ஒவ்வொரு நபரும் 8 டாலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என எலான் எஸ்க் கூறியுள்ளார்.

ஆட்குறைப்பு
அதேபோல இன்றைய தினம் தான் அங்கு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. 50% ஊழியர்கள், அதாவது 7500 பேர் பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று ஒரு பக்கம் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் ட்விட்டர் முடங்கியுள்ளதையும் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்,

வழக்கு
அதேநேரம் எலான் மஸ்க் கைகளில் ட்விட்டர் சென்ற பின், கண்டிப்பாக ஆட்குறைப்பு இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தே இருந்தனர். இதனால் தான் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இது அதிர்ச்சியைத் தரவில்லை. அதேநேரம் சில ஊழியர்கள் போதிய நோட்டீஸ் பிரியட் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications