அண்டார்டிகாவின் தென் துருவத்தை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ்! நிமோனியாவால் பாதிப்பு!
டெல்லி: இந்திய திபெத் எல்லை படையில் பணிபுரியும் அபர்ணா குமார் என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி அண்டார்டிகாவின் தென் துருவத்தை அடைந்ததன் மூலம் சாதனை படைத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில பிரிவிலிருந்து ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளவர் அபர்ணா குமார் (44). இந்திய திபெத் எல்லை காவல் படையில் டிஐஜியாக உள்ள இவர் 8 நாட்கள் பயணம் செய்து கடந்த 13-ஆம் தேதி அண்டார்டிகாவின் தென் துருவத்தை அடைந்தார்.
இதன் மூலம் இந்த மலையை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற சாதனையை படைத்துள்ளார். இவருடன் 7 பேர் கொண்ட குழு சென்றது. 111 மைல் தூரம் இவர்கள் சென்றுள்ளனர்.

சவால்கள்
இதையடுத்து, அபர்ணா குமார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபாவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். கடந்த 6 ஆண்டுகளாக மலை ஏற்றத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட சவால்களை பகிர்ந்து கொண்டார்.

பனிபொழிவு
இதுகுறித்து அபர்ணா செய்தியாளர்களிடம் கூறும்போது,கடந்த 2014-ம் ஆண்டு மலையேற்ற பயிற்சியை முடித்தேன். அதன் பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை. கடும் குளிர் நிலவும் தென் துருவத்தில் ஏறுவது மிகவும் கடினமாகவும், சவாலானதாகவும் இருந்தது. முகத்தில் பனி பொழிவு அடித்தது. கண்ணாடியே உடைந்துவிட்டது.

கணவர் பக்கபலம்
இதன்மூலம் 6 கண்டங்களில் உள்ள புகழ்பெற்ற சிகரங்களில் ஏறிவிட்டேன். 7-வதாக இந்த ஆண்டு வட அமெரிக்காவின் தினாலி சிகரத்தை அடைய திட்டமிட்டுள்ளேன். எனது வெற்றிக்கு பின்னால் எனது கணவர் சஞ்சய் குமார் உள்ளார்.

கொண்டாட்டம்
இந்த சிகரத்தில் ஏறியதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்றார் அபர்ணா குமார். இவரது சாதனையை இவருடன் பணியாற்றுவோர் கொண்டாடி வருகின்றனர்.

ஐபிஎஸ் பயிற்சி
இது போன்று மிகவும் குளிர் பிரதேசத்தை கடந்ததால் இவருக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது. நிமோனியா என்பது நுரையீரலில் தொற்று ஆகும். சாதனைப் படைத்த அபர்ணா குமார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பயிற்சியை முடித்தவர்.












Click it and Unblock the Notifications