லோக்சபாவில் நிறைவேறியது மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா.. புதிய நாடாளுமன்றத்தின் முதல் மசோதா இது!
டெல்லி: மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், நேற்று இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு 'நாரி சக்தி வந்தன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
இந்நிலையில் மசோதா குறித்து அனைத்துக் கட்சி எம்.பிக்கள் பங்கேற்ற விவாதம் லோக்சபாவில் நடைபெற்றது. இந்த மசோதாவை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்திப் பேசினர். பாஜக அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும் விமர்சித்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, பாஜக மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் பதில் அளித்துப் பேசினர். இதையடுத்து, வாக்கெடுப்பின் மூலம் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் இந்த மசோதா லோக்சபாவில் ஏகமனதாக நிறைவேறியது.
மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. 3ல் 2 பங்கு ஓட்டுக்கு மேல் மசோதாவுக்கு ஆதரவாகப் பதிவானதையடுத்து, மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திய பாராளுமன்ற கட்டடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெருமை பெற்றுள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் பிறகு பிறகு அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க இந்த மசோதா வழிவகை செய்யும்.












Click it and Unblock the Notifications