உணவு முறையில் இந்தியா தான் பெஸ்ட்.. உலக நாடுகளுக்கு அட்வைஸ் சொன்ன ஆய்வு.. அப்படி என்ன ஸ்பெஷல்?
டெல்லி: காலநிலை மாற்றத்துக்கும், உணவுப் பழக்க வழக்கத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று இனி எளிதில் கடந்து செல்ல முடியாது. காலநிலை மாற்றத்தில் இருந்து நம்மையும், இந்த பூமியையும் தற்காத்து கொள்ள உணவுப் பழக்க வழக்கம் முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் உணவு நுகர்வில் இந்தியா உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக இருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறியுள்ளனர்.
'இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சுது' பாடல் உணவுப் பிரியர்களுக்கு அதன் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும். அதில் பல்வேறு வகையிலான உணவுகள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில் பல வித கலாசாரங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கலாசாரம், அதற்கேற்ற வித்தியாசமான உணவுகள் பழக்கத்தில் இருக்கும்.

உணவுப் பழக்க வழக்கம் என்பது மாநிலத்துக்கு மாநிலம் மட்டுமல்ல, அந்தந்த மாநிலத்துக்குள்ளும் கூட வேறுபாடு இருக்கும். உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் உள்ள உணவுப் பழக்க வழக்கத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்நிலையில் 'லிவ்விங் ப்ளேனட்' என்கிற அமைப்பு 'ஜி20 நாடுகளின் உணவு நுகர்வு குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டது.
அதில், இந்தியாவின் உணர்வு நுகர்வு உலகத்துக்கே முன் மாதிரியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவின் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையை உலக நாடுகள் பின்பற்றினால் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும். முக்கியமாக 2050 ஆம் ஆண்டில் ஏற்படும் காலநிலை மாற்றுத்துக்கும் உகந்த வகையில் இந்திய உணவு நுகர்வு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்த இடங்களில், இந்தோனேஷியா மற்றும் சீனா நாடுகள் இருக்கின்றன. அந்த நாடுகளும், இந்தியாவை போலவே சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உணவு முறைகளை கடைபிடிப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆசிய நாடுகள் இதில் சபாஷ் வாங்கிய நிலையில், அதற்கு நேர் எதிராக சில நாடுகளின் உணவு நுகர்வு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் உணவு நுகர்வு கவலைக்குரிய வகையில் இருப்பதாக கூறியுள்ளனர். இந்த ஆய்வில் கொழுப்பு, சர்க்கரை நோய், உடல்பருமன் குறித்தும் ஆராய்ந்துள்ளனர். அந்த வகையில் உலகம் முழுவதும் சுமார் 2.5 பில்லியன் மக்கள் உடல்பருமன் பிரச்னையுடன் இருக்கின்றனர்.
இந்தியாவில் தேசிய சிறுதானிய விழிப்புணர்வு நடவடிக்கை நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாரம்பரிய தானியங்கள் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும். வட இந்தியாவில் பருப்பு, கோதுமை ரொட்டி அவற்றுடன் இறைச்சி பிரதான உணவாக உள்ளது. தென்னிந்தியாவில் அரிசியை சார்ந்துள்ள உணவு வகைகள் இட்லி, தோசை, சாம்பார், சட்னி உள்ளன.
அதனுடன் நாடு முழுவதுமே ஏராளமான மீன் வகைகள் மற்றும் ராகி, கம்பு உள்ளிட்ட தானியங்கள் இடம் பெற்றுள்ளன. உலகளவில் தற்போதைய உணவு நுகர்வு முறைகளை பின்பற்றினால் அது 2050 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியான மாற்றத்தையும் ஏற்படுத்தும். அப்படி நடந்தால் உணவு தொடர்பான பசுமை வாயு வெளியேற்றத்துக்கு 1.5 ° செல்சியஸ் காலநிலை இலக்கை, 263 சதவீதம் கடந்துவிடுவோம்.
அப்போது நமக்கு ஆதரவளிக்க ஏழு பூமிகள் தேவைப்படும்' என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு உணவுப் பழக்க வழக்கத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications