ஈபிள் டவரை விட உயரமானது..காஷ்மீரில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் ரயில்வே பாலம்..இத்தனை சிறப்புகளா?
டெல்லி: உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலம் என்று சிறப்பை பெறும் செனாப் பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஈபிள் டவரை விட அதிக உயரம் கொண்டதாக அதாவது 1,178 அடி உயரத்தில் இந்த மேம்பாலம் அமைந்துள்ளது. ஈபிள் டவரின் உயரத்தைவிட 35 மீட்டர் அதிக உயரம் கொண்ட செனாப் மேம்பாலத்தின் சிறப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
பயணிகள் வசதி மற்றும் போக்குவரத்துதுக்காக இந்திய ரயில்வே பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்கள் அறிமுகப்படுத்துவதாக இருக்கட்டும்..ரயில்களின் வேகத்தை அதிகரிப்பற்கான பணிகளை செய்வது ஆகட்டும் என பல்வேறு பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

உலகிலேயே உயரமான பாலம்
குறிப்பாக உலகிலேயே உயரமான பாலமாக கருதப்படும் செனாப் ரயில்வே பாலம் கட்டமைப்பு அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூறலாம். பொறியியல் அதியசமாக கருதப்படும் இந்த செனாப் ரயில் பாலம் கட்டமைப்பு பணிகள் முடிந்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. ரயில் மேம்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செனாப் ரயில் மேம்பாலத்தின் சிறப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ஈபிள் டவரை விட அதிக உயரம்
உலக அதியசங்களில் ஒன்றாக கருதப்படும் ஈபிள் கோபுரத்தை விட உயரமானது இந்த செனாப் ரயில் பாலம். பிரான்சு நாட்டில் உள்ள ஈபிள் டவரின் உயரம் 324 மீட்டர். செனாப் ரயில் பாலம் 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதாவது ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பாலம் வழியாக ரயில் செல்லும் போது பயணிகளுக்கு எதோ சாகச பயணம் போலவே இருக்கும். அதுவும் சுற்றிலும் மலைகள் நிறைந்த சூழல் மற்றும் மலைப்பிரேதசங்களுக்கான உண்டான மேகக்கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சிகளும் அங்கு அடிக்கடி காண முடியும் என்பதால் சுற்றுலாப்பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும் மேம்பாலத்தில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு அனுபவம் ஏற்படும்.

எந்த இடத்தில் உள்ளது?
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. ரியாசி மாவட்டத்தில் உள்ள கவுரி கிராமத்திற்கு அருகில் சலால் அணை உள்ளது. இந்த அணையின் இரு மலை முகடுகளுக்கு இடையே பிரமாண்டமான கட்டமைப்புடன் 'செனாப் பாலம்' உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது உலகின் மிக உயரமான பாலமாக இருப்பது சீனாவின் குய்சோ மாகாணத்தில் இருக்கும் பெய்பன்ஜியாங் மேம்பாலம் ஆகும். இந்த பாலம் 275 மீட்டர் உயரத்தில் உள்ளது. செனாப் ரெயில்வே பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என்ற பெருமையை பெற உள்ளது.

120 ஆண்டுகள் ஆயுட்காலம்
செனாப் பாலம் 359 மீட்டர் உயரமும் 1,315 மீட்டர் நீளம் கொண்டதாகவும் உள்ளது. அதாவது கிட்டதட்ட 1.5 கி.மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. உதம்பூர் - ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில்வே இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 35ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் ஆயுட்காலம் குறைந்தபட்சம் 120 ஆண்டுகள் என கூறப்படுகிறது. மணிக்கு 260 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் தாங்கும் வல்லமையுடன் இந்த பாலம் அமைக்கபட்டுள்ளது.

பாதுகாப்பு சோதனைகள்..
2004 ஆம் ஆண்டே இந்த பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டாலும் பல தடைகளை தாண்டி நிர்ணையித்த காலக்கெடுவை பலமுறை கடந்து தற்போதுதான் பணிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன. இந்த பாலத்தின் அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டதாக ரயில்வே அமைச்சரும் கூறினார்.












Click it and Unblock the Notifications