WWE புகழ் மல்யுத்த வீரர் ‛கிரேட்’ காளி பாஜகவில் இணைந்தார்.. பஞ்சாப் பிரச்சாரத்தில் குதிக்கிறார்!
டெல்லி: பிரபல மல்யுத்த வீரர் ‛கிரேட்' காளி பாஜகவில் இணைந்தார். பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. தற்போது சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், ஆட்சி கட்டிலில் அமர பாஜக, ஆம்ஆத்மி கட்சிகள் வியூகங்கள் வகுத்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

பாஜகவில் ‛கிரேட்’ காளி
இந்நிலையில் WWE மல்யுத்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவரும், பஞ்சாப்பை சேர்ந்தவருமான ‛கிரேட்' காளி டெல்லியில் வைத்து பாஜவில் இணைந்தார். விரைவில் அவர் பஞ்சாப்பில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

சிறந்த பிரதமர் மோடி
இதுகுறித்து அவர் கூறுகையில்,‛‛பாஜகவில் இணைந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை பார்க்கும்போது அவர் தான் நாட்டுக்கான சிறந்த பிரதமர் என உணர்ந்தேன். மேலும் பாஜகவில் இணைந்து நாட்டின் மேம்பாட்டில் பங்கெடுக்க வேண்டும் என நினைத்தேன். தற்போது கட்சியில் இணைந்துள்ளேன்'' என்றார்.

யார் இந்த ‛கிரேட்’ காளி
இவர் பஞ்சாப்பில் போலீஸ் துறையில் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் தனது அதீத உடல் வளர்ச்சியால் 2000ம் ஆண்டில் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றார். WWE சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இவருக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இதுதவிர 4 ஹாலிவுட், 2 பாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்
முன்னதாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி 2020ல் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். பொதுமக்கள் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications