"சனாதனம்.." இந்து மதம் மட்டுமில்லை.. இஸ்லாம், கிறிஸ்தவம் கூட.. பாபா ராம்தேவ் சொன்ன அந்த வார்த்தை
சனாதனம் என்றால் என்ன.. என்பதைப் பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் விளக்கினார்.
டெல்லி: கோவாவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சனாதனம் என்பது குறிப்பிட்ட மதத்திற்குச் சொந்தமான சொல் இல்லை என்று குறிப்பிட்டார்.
பிரபல யோகா குருவும் பதஞ்சலி நிறுவனருமான பாபா ராம்தேவ் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளைக் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்கிடையே அவரது அமைப்பு சார்பில் கோவாவில் கடற்கரையில் யோகா நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மொத்தம் மூன்று நாட்கள் இந்த யோகா நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், இதன் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறிய கருத்துகள் தான் இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது.

பாபா ராம்தேவ்
ஆபாசப் படங்கள் மற்றும் டிவி தொடர்கள், படங்களில் வரும் ஆபாச காட்சிகள் இளைஞர்களைக் கடுமையாகப் பாதிப்பதாகப் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் வரும் ஆபாசமான காட்சிகளால் இளம் தலைமுறையினர் திசை திருப்பப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், "இன்று இணையத்தில் ஆபாசப் படங்கள் கொட்டிக் கிடக்கிறது. அதேபோல படங்கள் சீரியல்களிலும் ஆபாச காட்சிகள் நிறைந்து உள்ளன. இது இளைய தலைமுறையினரைத் திசை திருப்புகிறது.

ஆன்மீக கல்வி
நமது குழந்தைகளுக்கு ஆன்மீக கல்வி தான் தேவை.. எந்த மருந்தையும் உட்கொள்ளாமல் இயற்கையான முறையில் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ மக்களை வழிநடத்துவதே எனது நோக்கம்.. சமூகத்தில் பரவி வரும் ஆபாசங்கள் கவலையளிப்பதாக உள்ளன. திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் கூட இளைஞர்களை வழிதவறச் செய்யும் அளவுக்கு ஆபாச கருத்துகள் உள்ளன.

சனாதனம்
இத்தகைய வீடியோக்களை பார்த்து அவர்கள் ஏமாறாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். சனாதனம் என்பது அனைத்து மதங்களையும் இணைக்கிறது. இதன் காரணமாகவே அதை அனைத்து தரப்பு மக்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சனாதனம் என்ற ஒற்றை சொல்லில் வாழ்க்கை தேவையான அனைத்து நல்ல மதிப்புகளும் உள்ளன. இந்து, சமணம், புத்தம் மற்றும் சித்தம் உட்பட அனைத்து மதங்களிலும் இது இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

முஸ்லீம், கிறிஸ்துவம்
தொடர்ந்து பேசிய அவர் மாற்று மதங்களில் இருக்கும் சனாதனம் என்பது குறித்தும் சில பரபர கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது, "இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மதங்களும் கூட சனாதனத்தையே அடிப்படையாகக் கொண்டது.. சனாதனம் என்பது சர்ச்சைக்குரிய சொல் இல்லை எல்லாம் இல்லை. இது எந்தவொரு குறிப்பிட்ட மதம் அல்லது அரசியல் கருத்துக்கும் தொடர்பில்லாத ஒரு சொல்.. அதைப் பயன்படுத்துவதில் எந்தவொரு தவறும் இல்லை" என்றார்.

ராஜஸ்தான் நிகழ்ச்சி
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த இந்து மடாதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர், இந்துமதம் மட்டுமே நல்லதைச் செய்கிறது. இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துகிறது. பெண்களை இஸ்லாமும் கிறிஸ்தவமும் கட்டாய மதமாற்றம் செய்கிறது என்றெல்லாம் பேசியிருந்தார். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications