பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயம் பூட்டு உடைப்பு- பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது
தருமபுரி: தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரத மாதா ஆலயம் உடைப்பு சம்பவத்தில் ஏற்கெனவே 4பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் நடந்த 75 ஆவது சுதந்திர தினம் அமுத பெருவிழா பாதயாத்திரையை பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கர் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை சுதந்திர தின விழாவை முன்னிட்டு பலர் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்து சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிக்க முற்பட்டனர்.
அப்போது பாரதமாதா நினைவாலயத்தில் இருந்த கதவுகள் பூட்டப்பட்டு இருந்த நிலையில் அங்கு பணியாற்றும் நினைவிட கண்காணிப்பாளரிடம் கதவை திறக்கும்படி வலியுறுத்தினர். இது மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்த துறையை சேர்ந்த அதிகாரிகளை கேட்க வேண்டும் என கூறினார்.
இதையடுத்து செய்தி மக்கள் அதிகாரியிடம் கண்காணிப்பாளர் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அங்கு யாருக்கும் அனுமதியில்லை என கூறியதால் பாஜகவினர் ஆத்திரமடைந்து பாரதமாதா நினைவாலயத்தில் உள்ள கதவின் பூட்டை கல்லால் உடைத்து பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதுகுறித்து பென்னாகரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆலய உடைப்பு தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அத்துடன் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கமும் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications