ஆளுநரை தூண்டிவிடும் பாஜக.. ’அங்க’ கம்பு சுத்துங்க ஆளுநரே! தமிழ்நாட்டுல இல்லை.. மு.க.ஸ்டாலின் பதிலடி!
தருமபுரி: தமிழுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு எதிராக, தமிழர்களுடைய உணர்வுகளுக்கு எதிராக பேசிவிட்டு வருகின்ற ஆளுநரை வைத்து, தன்னுடைய இழிவான அரசியலை ஒன்றிய பாஜக அரசு செய்கின்றது எனவும், பாஜக ஆளக்கூடிய மாநிலங்களுக்கு சென்று கம்பு சுற்றுங்கள் ஆளுநரே என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக தர்மபுரி சென்றுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் புதிய நலத்திட்டங்களை துவங்கி வைத்தார்.
மேலும் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்டவற்றுக்கான ஆணைகளையும் வழங்கினார், தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்," 2021 தேர்தலுக்கு முன்பு, விடியல் பயணம் திட்டம் குறித்த வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் சொன்னோம்.

முதல்வர் முக ஸ்டாலின்
உடனே நமக்கு எதிரானவர்கள் என்ன சொன்னார்கள்? இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி - இதனால், பேருந்துகளை குறைத்துவிடுவார்கள் - பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிடுவார்கள் என்று தங்கள் இஷ்டத்துக்கு கதை - திரைக்கதை வசனமாக எழுத தொடங்கினார்கள். ஆனால், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாட்டின் நிதிநிலைமையை பாழ்படுத்துவதையும் மீறி, சொன்னதுபோல், ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே, விடியல் பயணம் திட்டத்துக்கு கையெழுத்திட்ட கை தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய கை.
தமிழக அரசு
இந்தத் திட்டத்திற்கு ஆகின்ற பணத்தை, செலவாக பார்க்காமல், பெண்களுக்கான சேமிப்பாக, மகளிர் முன்னேற்றத்திற்கான முதலீடாகதான் நாங்கள் நினைத்தோம்! இதனுடைய பலன் சமூகத்தில் எதிரொலிக்க தொடங்கிவிட்டது! ஒவ்வொரு மாதமும் சுமார் ஆயிரம் ரூபாய் என்று நாம் ஆட்சிக்கு வந்த இந்த 51 மாதத்தில், ஒவ்வொரு மகளிரும் 50 ஆயிரம் ரூபாய் சேமித்திருக்கிறார்கள்! எவ்வளவு பெரிய புரட்சி இது! யாராலும் மாற்ற முடியாத, மறுக்க முடியாத சாதனை இது! அதனால்தான், இப்போது செய்திகளில் பார்த்திருப்பீர்கள்... இந்த விடியல் பயணம் திட்டத்தை, கர்நாடகா மாநிலத்திலும், ஆந்திரா மாநிலத்திலும் தற்போது நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்!
ஆளுநர் ஆர்என் ரவி
அதனால்தான் சொல்கிறோம்... நாட்டின் அத்தனை வளர்ச்சித் திட்டங்களுக்கும் தமிழ்நாடுதான் முன்னோடி! திராவிட மாடல்தான் இந்தியாவிற்கான திசைகாட்டி! இதை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான், ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் சொல்வதை பற்றி நான் கவலைப்படவில்லை. அதுதான் அவர்கள் அரசியல்! அவர்களைவிடவும் மலிவான அரசியல் செய்கின்றார் ஒருவர்! யாரென்று தெரியும் உங்களுக்கு - அவர்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு நியமித்திருக்கின்ற நம்முடைய ஆளுநர் ரவி அவர்கள்!
தி.மு.க. ஆட்சி
ஆளுநர் மாளிகையில் இருக்கின்ற அவர் செய்கின்ற வேலை என்ன தெரியுமா? தி.மு.க. ஆட்சி மேல் அவதூறு பரப்புகின்றார்! தி.மு.க. மேல் அவதூறு பரப்புவார்! திராவிடத்தைப் பழிப்பார்! சட்டங்களுக்கு ஒப்புதல் தரமாட்டார்! இல்லாத திருக்குறளை அச்சிட்டு வழங்குவார்! தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பார்! நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களை இழிவுபடுத்துவார்! தமிழ்நாட்டின் கல்வி, சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம், உண்மைக்குப் புறம்பாக இல்லாதது பொல்லாததைச் சொல்லி, பீதியை கிளப்புவார்! இதை மட்டும் தான் அவர் செய்கிறார்.
பாஜக
இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதை நாங்கள் உங்களிடம் சொல்கிறோமோ, இல்லை நீங்கள் எங்களிடம் சொல்கிறீர்களா! இல்லை. ஒன்றிய பாஜக அரசு வெளியிடுகின்ற புள்ளிவிவரங்களே சாட்சியிருக்கிறது! அதுமட்டுமல்ல, இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடு அனைத்து விதத்திலும் மிகச் சிறந்த மாநிலமாக இருக்கிறது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல், எரிச்சலில், தன்னுடைய கோபத்தை புலம்பலாக பொதுமேடைகளில் கொட்டித் தீர்க்கிறார். பள்ளிக் கல்வியில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறோம். தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதால்தான் இந்த 4 ஆண்டு காலத்தில், 10 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை நாம் ஈர்த்திருக்கின்றோம்.
பெண்களுக்கு பாதுகாப்பு
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம். ஆளுநர் கண்டுபிடித்திருக்கிறார். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்ற மாநிலங்களில் பா.ஜ.க. ஆளுகின்ற உத்தர பிரதேசம்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதனால் ஆளுநர் அவர்களே, நீங்கள் கம்பு சுற்ற வேண்டியது இங்கே இல்லை - பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் தான் அங்கு சென்று கம்பு சுற்றுங்கள் -தமிழ்நாட்டில் இல்லை. அங்கு சென்று சுற்றுங்கள்.
ஒன்றிய பாஜக அரசு
தொடர்ந்து தமிழுக்கு எதிராக - தமிழ்நாட்டுக்கு எதிராக - தமிழர்களுடைய உணர்வுகளுக்கு எதிராக - பேசிவிட்டு வருகின்ற ஆளுநரை வைத்து, தன்னுடைய இழிவான அரசியலை ஒன்றிய பாஜக அரசு செய்கின்றது. என்னைப் பொறுத்தவரையில், அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கவேண்டும். அவர் இருப்பதால்தான் நமக்கு நல்லது என்று நான் ஆரம்பத்தில் இருந்தே நானும் சொல்லிக் கொண்டு வருகிறேன்.
ஆளுநர் ரவி
ஏனென்றால், நமக்குள் இருக்கின்ற மொழி உணர்வை, இன உணர்வை, திராவிட இயக்கக் கொள்கை உணர்வை பட்டுப் போக விடாமல் - கொள்கை நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்கின்ற வேலையை ஆளுநர் ரவி சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்! அவர் பேசட்டும். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம் மக்களாகிய உங்களைப் பற்றிதான். வாக்களித்த உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே சிந்தனை.












Click it and Unblock the Notifications