ஒகேனக்கல்லில் வெள்ளம்.. மேட்டூரில் 2.10 லட்சம் கனஅடி நீர் திறப்பு.. காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தருமபுரி : ஒகேனக்கல்லில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து, அணையின் பாதுகாப்பைக் கருதி உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு
தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி ராசிமனல், பிலிகுண்டுலு ஒன்றிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 1,50,000 கனஅடி தண்ணீர் வந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு
ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மெயின் அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலை பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும் துணி துவைக்கவும் செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கிமூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் ஒகேனக்கல்லில் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. இந்த வெள்ளப்பெருக்கால் மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் நீர் மட்டம் 120.130 அடியாக உள்ளது. நீர் இருப்பு : 93.678 டி எம் சியாக உள்ளது. நீர் வரத்து : 158000 கன அடியாக உள்ளது.

வெள்ளப்பெருக்கு
அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் உபரியாக வெளியேற்றப்படுவதால், எடப்பாடி, பொறையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதனயடுத்து, காவிரிக் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கரையோரத்தில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications