தர்மபுரியில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை.. 30 ஆண்டுகள் பணிபுரிந்தது அம்பலம்
தர்மபுரி: தர்மபுரி அருகே, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியை, 30 ஆண்டுகளாக பணியாற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே, திம்மராயன அள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வள்ளியம்மாள்(50). இவர் கடந்த 1988ம் ஆண்டு, பிளஸ் 2 முடித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து, ஆசிரியர் பணியில் சேர்ந்திருககிறார்.
.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தலைமை ஆசிரியை வள்ளியம்மாள் பணியில் சேரும் போது கொடுத்த சான்றிதழ்கள், போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உத்தரவின் பேரில், காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் உமாதேவி, தலைமையாசிரியர் வள்ளியம்மாள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
இதனை அறிந்த வள்ளியம்மாள் தலைமறைவாகி விட்டார். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வள்ளியம்மாளை தேடி வருகிறார்கள். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா இதுபற்றி கூறுகையில், 'போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை வள்ளியம்மாள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றார். போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றிய சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.