மாற்றுத்திறனாளிகள் இனி அரசின் உதவி பெற தனித்துவ அடையாள அட்டை கட்டாயம்.. எப்படி பெறுவது தெரியுமா?
தர்மபுரி: இ-சேவை மையங்கள் மூலம் தனித்துவமான அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
"மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக ஐடி" திட்டம், மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு பேர் உள்ளார்கள், யார் யார் உள்ளார்கள் என்பதை தேசிய அளவில் சேகரிக்க செயல்படுத்தப்படுகிறது. அதன்படியே மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவேற்றம் செய்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அடையா அட்டை பெறுவோருக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகை, பேருந்து, ரயில் பயண சலுகை மற்றும் அரசின் பல்வேறு உதவிகளுக்கு இந்த தனித்துவ அடையாள அட்டை முக்கியமாகும்.
இதனிடையே தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவேற்றம் செய்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு இந்த அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளது.
எனவே தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்று திறனாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.
இந்த அடையாள அட்டை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி நபரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதேபோல் www.swavlambancard.gov.in என்ற இணையதளத்தில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications