"ஆபீசர் நானு!" பவர் கட் புகார் அளித்தவர் மீது மின் மீட்டர் தூக்கிவீசி தாக்குதல்! பாய்ந்தது நடவடிக்கை
தர்மபுரி: பவர் கட் குறித்து புகார் அளிக்க வந்தவரை மின் ஊழியர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறங்கள், கிராமப்புறங்கள் என அனைத்து பகுதிகளிலும் வீடுகளுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் சார்பிலேயே மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. 100 யூனிட்டை தாண்டி பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

புகார்கள்
தற்போது பருவ மழைக் காலமும் தொடங்கி உள்ள நிலையில், மின்சார பற்றாக்குறை இல்லாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மின்வாரியம் எடுத்து வருகிறது. காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், ஆங்காங்கே சில இடங்களில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதாகப் புகார்கள் இருந்தே வருகிறது. அதன்படி தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு டவுன் பஞ்சாயத்து பகுதியில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

புகார்
இதனால் அங்குள்ள பொதுமக்களால் எவ்வித வேலைகளையும் செய்ய முடியவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், பாலக்கோடு டவுன் பஞ்சாயத்து, தீர்த்தகிரி நகரை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் நேற்று பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்கு இது தொடர்பாகப் புகார் அளிக்கச் சென்றுள்ளார். தன்னுடைய வீட்டில் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என்றும் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகப் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

தாக்குதல்
இருப்பினும், அப்போது அங்கு உதவி மின் பொறியாளர் இல்லை எனக் கூறப்படுகிறது. அங்கிருந்த வணிக ஆய்வாளர் குப்புராஜ் என்பவர் தானும் அதிகாரி தான் என்று கூறி விசாரித்துள்ளார். அப்போது இரு தரப்பிற்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக புவனேஷ்வரி உடன் சென்ற ஒருவர் தனது மொபைல் போனை எடுத்து குப்புராஜ் பேசுவதை வீடியோ எடுத்துள்ளார்.

வீடியோ
இதனால் ஆத்திரமடைந்த குப்புராஜ் முதலில் அலுவலகத்திற்குள் சென்று அமர்ந்தார். அதன் பின்னரும் வீடியோ எடுப்பதை பார்த்து திடீரென ஆத்திரமடைந்த அவர், அங்கே அலுவலகத்திற்குள் அடுக்கி வைத்திருந்த மின் மீட்டரை எடுத்து வீடியோ எடுத்தவர்கள் மீது வீசி தாக்க முயன்றார். நல்வாய்ப்பாக வீடியோ எடுத்த நபர் சற்றே நகர்ந்து கொள்ள அவர்கள் எவ்வித காயமும் இல்லாமல் தப்பினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில்,வணிக ஆய்வாளர் குப்புராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications