ஆர்டர் போட்டது அவராம்..ஸ்கெட்ச் போட்டது இவராம்! ஓபிஎஸ்ஸை அலறவிட்ட ஒபிஎஸ்கள்! எனக்குன்னே வருவீங்களா?
இராமநாதபுரம்: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக ஐந்து பன்னீர்செல்வங்கள் போட்டியிட்டது தேர்தல் சமயத்தில் பரபரப்பாய் பேசப்பட்டது. இந்த நிலையில் 5 பேரும் ஒரே தொகுதியில் போட்டியிட காரணம் யார்? அதன் பின்னணியில் இருந்து செயல்பட்டது யார்? போன்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
என்னதான் ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தாலும் தற்போது அதிமுக அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முடியாத நிலையில் இருப்பவர் தான் அதிமுகவின் முன்னாள் பொருளாளரும் தமிழக முன்னாள் முதலைமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்.

ஜெயலலிதாவே பல நேரங்களில் ஓ.பன்னீர்செல்வத்தை வெகுவாக பாராட்டி பேசி இருக்கிறார். விசுவாசத்திற்கு உதாரணம் ஓ.பன்னீர்செல்வம் என பேசியதை தற்போது வரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்களை உலாவ விட்டு வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம்: காரணம் அந்த அளவுக்கு ஜெயலலிதா இருந்தபோது அதிகாரம் பொருந்திய நபராகவும் அதே நேரத்தில் தலைமைக்கு கட்டுப்பட்டு விசுவாசமாகவும் செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தான் ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் வாழ்வில் தொடர்ந்து சறுக்கல்களை சந்திக்க நேர்ந்தது. சசிகலா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டுவதாக தர்ம யுத்தத்தை தொடங்கினார். இதனையடுத்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் சசிகலாவை முதலமைச்சராக பதவியேற்க வைக்க தீவிர ஏற்பாடுகள் நடந்தன.
அரசியல் சறுக்கல்: கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டனர். அப்போது இடி போல இறங்கியது உச்சநீதிமன்ற தீர்ப்பு. சசிகலா சிறைக்கு செல்ல நேர்ந்தது. இதை அடுத்து அவரது ஏற்பாட்டின் பேரில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவி ஏற்றார். சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் வாக்களிப்பில் வெற்றி பெற்றார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்குப் பிறகு அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.
ஒற்றைத் தலைமை: சசிகலாவுக்கு எதிராக போர் கொடி தூக்கிய பன்னீர்செல்வம் சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்தார். யார் முதலமைச்சர் ஆக்கினார்களோ அவரையே கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. இப்படியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகும் நான்காண்டுகள் ஆட்சி தொடர்ந்தது. அதே நேரத்தில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பிறகு ஒற்றை தலைமை முழக்கம் முன்வைக்கப்பட்டது. ஒற்றை தலைமை தேவையில்லை என ஓ.பன்னீர்செல்வம் சொல்ல எடப்பாடி தரப்பு அவரை ஓரங்கட்டியது. அதனைத் தொடர்ந்து கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார் ஓபிஎஸ். அதற்கு பிறகு நடந்த சட்டப் போராட்டங்கள் அனைவரும் அறிந்ததே.. இந்த நிலையில் தான் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த ஓபிஎஸ் அந்த கூட்டணியில் இணைந்தார்.
5 பன்னீர்செல்வம்: எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறார். தனது சொந்த ஊரான தேனியை விட்டுவிட்டு ராமநாதபுரம் தொகுதியில் களமிறங்குகிறார் ஓபிஎஸ் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே நேரத்தில் அங்கேயும் ஓபிஎஸ்-க்கு மிகப்பெரிய சிக்கல் காத்திருந்தது. பன்னீர்செல்வம் என்ற பெயரைக் கொண்ட ஐந்து பேர் களத்தில் இறங்கினர். நான்கு பேர் ஓபிஎஸ் என்ற இன்சியல் கொண்டவர்கள். ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் நான்கு பேரும், எம் பன்னீர்செல்வம் என்ற பெயரோடு ஒருவரும் என மொத்தம் ஆறு பன்னீர்செல்வங்கள் களத்தில் இறங்கினர்.
தலைமை உத்தரவு: அகர வரிசைப்படி ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் வாக்கு இயந்திரத்தில் இரண்டாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு சென்றது. பிரச்சாரத்தின் போதும் சுயேச்சையாக போட்டியிட்ட பன்னீர் செல்வங்கள் ஓபிஎஸ் என்ற இன்சியலை பயன்படுத்தியே வாக்கு சேகரித்தனர். இதனால் வாக்காளர்கள் பலரும் குழப்பம் அடைந்தனர். இது திட்டமிட்ட சதி என ஓபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியது. இதுகுறித்து விசாரித்த போது அது உண்மைதான் என்பது தெரிய வந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் நவாஸ் கனி போட்டிருக்கிறார். எதிர்த்து அதிமுக வேட்பாளர் போட்டியிட்டாலும் ஓ.பன்னீர்செல்வம் ஜெயித்து விடக்கூடாது என்பதுதான் அதிமுக தலைமையின் உத்தரவாக இருந்திருக்கிறது.
முன்னாள் அமைச்சர்: இதற்காக மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அவரும் 'உதயத்திற்கு' முன்னதாகவே எழுந்து தனது ஊரில் இருந்த பன்னீர்செல்வங்கள் பெயர் பட்டியலை தயாரித்து தேர்தலில் களம் இறக்கியதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அவர்களின் டெபாசிட், பிரச்சாரத்திற்கான செலவுகளையும் அவரே கவனித்துக் கொண்டதாகவும், பூத் ஏஜென்ட் நியமனம் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் அவரே பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
வெல்வாரா ஓபிஎஸ்?: திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை ஓபிஎஸ் ஜெயித்து விடக்கூடாது என அதிமுக தலைமை உறுதியாக இருக்கும் நிலையில் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மதுரையைச் சேர்ந்த அமைச்சர் அதிமுகவுக்கு வேலை பார்த்தாரோ இல்லையோ ஓ.பன்னீர்செல்வம் ஜெயித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காகத்தான் இந்த ஐந்து பன்னீர்செல்வங்களின் ஏற்பாடு என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர். ஓபிஎஸ்-ன் போராட்டம் வெல்லுமா அல்லது அதிமுக தலைமையின் உத்தரவு வெல்லுமா என்பது தேர்தல் முடிவின் போது தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications