சாப்பாட்டுக்கு உப்பு, அணிக்கு டோணி!
சென்னை: உலகக் கோப்பை போட்டிக்கு, டோணி இல்லாத அணியா? கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை.' என்று திருவாய் மலர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடருக்கான அணித் தேர்வின்போது, கேப்டன் கூல் டோணி சேர்க்கப்பட்டார். 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியைத் தேர்வு செய்வதற்காக முதல் சோதனைதான் இலங்கைத் தொடர் என்று கூறப்பட்டது.
நல்ல உடல் திறனுடன் இருந்தால் மட்டுமே, 2019 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற முடியும் என்றும் அணி தேர்வாளர்கள் கூறினர். உலகக் கோப்பை அணியில் டோணி இருப்பாரா மாட்டாரா என்று, சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தாத குறைதான்.
சிரிச்சே சாதிச்ச டோணி
ஆனால், எந்த விமர்சனத்துக்கும் அலட்டிக் கொள்ளாமல், சிரிச்சே, சைலைண்டாக காரியம் சாதித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி போல, இந்தாங்க என்னுடைய பதில் என்று, பேட்டிங்கில் காட்டினார் டோணி.
நச்சுன்னு 4 போட்டி
4 போட்டிகளில் அவுட்டாகாமல், 162 ரன்கள் எடுத்தார். அதைத் தவிர, உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் நான்தான் என்பதையும், 100வது ஸ்டம்பிக் சாதனை செய்து நிரூபித்தார்.
இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்
உலகக் கோப்பை அணியில் டோணி இருக்க மாட்டார் என்று நாங்கள் கூறவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் கூறினோம் என்று கமல் பாணியில், தேர்வு குழுவினர் மழுப்ப ஆரம்பித்தனர்.
பெஸ்ட் பார்ம்.. சாஸ்திரி
`தற்போதுள்ள இந்த அணியில், 36 வயதாகும் டோணிதான் மிகச் சிறந்த பார்மிலும், நல்ல உடல்திறனுடம் உள்ளார். அதனால், அவரை அணியில் இருந்து நீக்குவது குறித்து அணி நிர்வாகம் யோசிக்கவில்லை' என்று கோச் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
டோணிக்கு நிகர் டோணிதான்
`உலகக் கோப்பை அணியில் விளையாட உள்ள டோணி்க்கு நிகரான ஒருவரை பார்க்க முடியாது. சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், கபில்தேவ் போல, டோணியும் மிகப் பெரிய ஜாம்பவான். இலங்கைக்கு எதிரான போட்டியில், டோணி காட்டியது வெறும் டிரைலர்தான். மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கிறது' என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இதைத்தானே நாங்களும் சொன்னோம் என்று டோணி ரசிகர்கள் கூறியுள்ளனர்.