பழனி சித்தநாதன் சன்ஸ், ஸ்ரீகந்த விலாஸ் குரூப் ரூ.93 கோடி வரி ஏய்ப்பு.. 56 கிலோ தங்கம் பறிமுதல்
பழனி: வரிஏய்ப்பு புகார் தொடர்பாக பழனி மலை அடிவாரத்தில் உள்ள சித்தநாதன் சன்ஸ் மற்றும் ஸ்ரீகந்த விலாஸ் குரூப் ஆகிய பிரபல பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை கடை உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த 30 ந்தேதி தொடங்கி 3 நாட்கள் சோதனை நடத்தினர்.
25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனைகளை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 56 கிலோ தங்கம் மற்றும் 2.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.30 கோடி இருக்கும். பஞ்சாமிர்தம் கடை உரிமையாளர்கள் இருவரும் 93 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரு கடைகளுமே தமிழகம் முழுக்க புகழ் பெற்றவை. ஆனால், வரி ஏய்ப்பு புகாரில் இதுவரை ரெய்டுகளுக்கு உள்ளாகாதவை. முதல் முறையாக இங்கு சோதனை நடத்த வருமான வரி அதிகாரிகள் திட்டமிட்டபோது, வேண்டாம் என்றுதான் நினைத்தார்களாம். ஆனால், அதில் ஒரு இளம், அதிகாரிதான், விடாப்பிடியாக சோதனை நடத்த வற்புறுத்தியதாகவும், அந்த அதிகாரி, நினைத்ததை போலவே, நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.