சின்ன சின்ன அன்பில் தானே.. அவளும் தாயல்லவோ..! பூனைக்கு வளைகாப்பு..புஷிக்கு பூரிப்பு! ஊரே மெச்சுதே!
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் செல்லப் பிராணியான பூனைக்கு 11ஆம் வகுப்பு மாணவி நடத்திய தடல் புடலான வளைகாப்பு விழாவில் உற்றார், உறவினர்கள் பங்கேற்று ஆசிர்வதித்தனர். சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு என ரீல்ஸ் போட்டு மாணவியை வாழ்த்தி வருகின்றனர் நெட்டிசன்கள்..!
தங்கள் குடும்பத்தினருக்கு வாரிசைப் பெற்றுக் கொடுக்கும் பெண்களுக்கு தங்களால் முடிந்த அளவு எளிமையான முறையிலோ அல்லது பிரம்மாண்டமாகவோ உறவினர்களை அழைத்து வளைகாப்பு நடத்தும் வழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

வளைகாப்பின் போது வளையல்கள் அணிவித்து அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை பரிமாறுவது தமிழர்களின் பாரம்பரியமான வழக்கங்களில் ஒன்று.
சில நேரங்களில் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு வளைகாப்பு நடக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையை சேர்ந்த காவலர் ஒருவர் தான் வளர்க்கும் நாய்க்கு வளைகாப்பு நடத்தினார். சில ஆண்டுகளுக்கு முன்பு பசுமாட்டுக்கும் வளைகாப்பு நடத்திய சம்பவம் நடைபெற்றது. அந்த வகையில், திண்டுக்கல்லில் செல்லப் பிராணியான பூனைக்கு 11ஆம் வகுப்பு மாணவி நடத்திய தடல் புடலான வளைகாப்பு விழாவில் உற்றார், உறவினர்கள் பங்கேற்று ஆசிர்வதித்தனர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் கமலா -சின்னச்சாமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் லட்சுமி பிரியதர்ஷினி, திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது வீட்டில் புஷி என்ற பூனையை சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக செல்லமாக வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனையின் வயிறு பெரிதாக ஆனதால் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தனர் தம்பதியினர் அப்போது புஷி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து மகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினர் பூனைக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளார். பின்பு தனது பெற்றோர்கள், சகோதரிகள் உற்றார் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து செல்லப் பிராணியான பூனை புஷிக்கு வளைகாப்பு விழாவானது நடைபெற்றது.
இந்த வளைகாப்பு விழாவில் ஒரு பெண் தாயுற்று வளைகாப்பு விழா நடத்தப்படுவது போல் ஒற்றை வரிசையில் சீர்வரிசைகள் செய்து பூனைக்கு புது ஆடை அணிவித்து, வளையல் அணிவித்து, சந்தன குங்குமம் நெற்றியிலிட்டு, பூ தூவி செல்ல பிராணியான பூனைக்குட்டிக்கு சாக்லேட் போன்ற உணவுகள் கொடுத்து வெகு விமர்சையாக தடல் புடலாக வளைகாப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விழாவில் உற்றார், உறவினர்கள் பூனை புஷிக்கு வளைகாப்பு செய்து வைத்து ஆசிர்வாதம் செய்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வளைகாப்பில் பரிமாறப்படுவது போல், பல்சுவை உணவுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவ பூனை புஷிக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினரை சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்தி வருகின்றனர். மனிதர்களை மனிதர்களே மதிக்காத நிலையில் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான பூனைக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினருக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்களும் பூனைக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications