திண்டுக்கல்லில் தனியார் பஸ் மோதி இருவர் பலி.. பேருந்துக்கு தீ வைத்து போராட்டம்.. பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் தனியார் பேருந்து மோதி இருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் தனியார் பேருந்து மோதி இருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
பழனி அருகே இருக்கும் சத்திரப்பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு 8 மணி அளவில் அங்கு தனியார் பேருந்து ஒன்று அதி வேகத்தில் வந்துள்ளது. வேகமாக வந்த அந்த பேருந்து எதிரே வந்த பைக் மீது மோதியது.

இதில் விபத்தில் பைக்கில் வந்த இருவருமே சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். இதனால் அங்கு வேகமாக கூடிய மக்கள் பேருந்து ஓட்டுனரையும், நடத்துனரையும் அங்கேயே சிறைபிடித்தனர். அதோடு, பேருந்தில் உள்ள மக்களை மொத்தமாக வெளியேற்றி பேருந்தை அடித்து உடைத்தனர்.
அதன்பின் ஆத்திரத்தில் மக்கள் பேருந்துக்கு தீ வைத்து அங்கேயே போராட்டம் நடத்த தொடங்கினார்கள். பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது தெரிந்தவுடன் அங்கு போலீசாரும், தீயணைப்பு படையினருக்கும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு போலீசார் தற்போது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். அந்த தனியார் பேருந்து எப்போதும் அதிவேகத்தில்தான் செல்லும், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மக்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் சத்திரப்பட்டியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications