திண்டுக்கல் பால் வியாபாரி.. கதவை திறந்து தூக்கம்.. காற்றுடன் வந்த களவாணி கண்ணில் கண்ணீர்.. செம்ம
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பால் வியாபாரி காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியபோது வீடு புகுந்து திருடிய இளைஞர் தர்மஅடி வாங்கினார்.. திருடன் உள்ளே புகுந்த போது திடீரென ஆவேசமாக நாய் குரைத்ததால் திருடன் வசமாக சிக்கினார்
நகரங்களில் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், கடும் பாதுகாப்பு இருந்தாலும் எளிதாக திருடிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். ஆனா திருடர்கள் கிராமங்களில் திருடுவது அவ்வளவு எளிதானது அல்ல.. ஏனெனில் கிராமங்களில் கேமராக்கள் இல்லை என்றாலும், அங்கு 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் போல் வயதானவர்கள் சிலர் விழித்தபடியே இருப்பார்கள்.

இன்னொரு பக்கம், நாய்கள் யாராவது புதியவர்கள் வந்தால் கடுமையாக குலைக்கும். தெருநாய்கள் இரவில் வெளியாட்கள் வந்தால், அவர்களை ஒருவழி செய்துவிடும். அந்த வகையில் திண்டுக்கல் அருகே கிராமத்தில் திருடனப் போன இளைஞரை நாய்கள் குரைத்து காட்டிக்கொடுத்தன.இதனால் அவர் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கினார்.
திண்டுக்கல் அருகே உள்ள குட்டியபட்டி பரணிநகரை சேர்ந்த 44 வயதாகும் சுந்தரபாண்டியன், அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வரும் பால் வியாபாரி ஆவார். இவர் கடந்த மே 27ம் தேதி நள்ளிரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். வெப்பம் மற்றும் புழுக்கம் காரணமாக காற்று வரட்டும் என்று தனது வீட்டின் கதவை அவர் திறந்து வைத்திருந்தார். ஆனால் காற்றும் வந்ததும், களவாணி பயலும் வந்தார்.
நள்ளிரவில், அவரது வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி மர்மநபர் ஒருவர் உள்ளே குதித்திருக்கிறார். பின்னர் திறந்து கிடந்த வீட்டுக்குள் நுழைந்த அவர், ரூ.1,000 மற்றும் செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். அந்த சமயத்தில் சுந்தரபாண்டியன் வளர்த்து வந்த நாய், மர்ம நபரை பார்த்து ஆவேசமாக குரைத்தது. அந்த சத்தம் கேட்டு எழுந்து சுந்தரபாண்டியன் வேகமாக வெளியே வந்தார்.
அப்போது வீட்டுக்குள் மர்ம நபர் நின்று கொண்டிருந்ததை கண்டு சுந்தரபாண்டியன் கடும அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து திருடன் திருடன் என கூச்சலிட்டதுடன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், தனது வீட்டில் திருடிய மர்ம நபரை சுந்தரபாண்டியன் உடனடியாக மடக்கி பிடித்தார். பின்னர் அவருக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், நிலக்கோட்டை அருகே உள்ள கல்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்ற மணிகண்டன் (32) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை நேற்று கைது செய்தார். வேறு ஏதேனும் குற்றச்செயலில் மணிகண்டன் ஈடுபட்டிருக்கிறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் யாரேனும் இரவில் காற்றுக்காக கதவு அல்லது ஜன்னலை திறந்து வைத்து தூங்க வேண்டாம் என்று திண்டுக்கல் போலீசார் வேண்டுகோள் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications