திண்டுக்கல் அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை! இரவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது பயங்கரம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே, முன்னாள் பாஜக மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன், அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த ராஜாக்காபட்டி ஊராட்சி கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயியான இவர் பாஜக சாணார்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்தவர். விவசாயம், ஆற்று மணல் விற்பனை, லாரி தொடர்பான தொழில்களை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை இரவு ராஜக்காபட்டி அருகில் உள்ள மடூர் பிரிவில் முத்தாலம்மன் பூஞ்சோலை கோவில் என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் பாலகிருஷ்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் சொத்து பிரச்சனையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் துணை கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பாலகிருஷ்ணன் என்ன காரணத்தால் கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. சுற்றுவட்டார பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அண்ணன் - தம்பி சொத்து தகராறில் பாலகிருஷ்ணன், ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட்டதால் மற்றொரு தரப்பு கொலை செய்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications