பழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு
பழனி முருகனுக்கு காவடி எடுத்து படியேறி தரிசனம் செய்து வழிபட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் எல். முருகன்.
பழனி: தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இன்றைய தினம் காவடி சமந்து வழிபட்டுள்ளார். பழனி முருகனை வழிபட்ட எல். முருகன், வேல்யாத்திரை வெற்றிகரமாக நடைபெற்றதற்காக பழனி முருகனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினார்.
Recommended Video
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடான திருஆவினன்குடி எனப்படும் பழனி மலை முருகனுக்கு தான் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பாதயாத்திரையாக காவடி எடுத்துவந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதுண்டு.

பழனி மலை முருகனுக்கு காவடி தூக்கி வரும் வழக்கத்தை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் அசுரனான இடும்பன் தான். அதற்கு பிள்ளையார் சுழி போட்டது குறுமுனியான அகத்தியர் தான்.
காவடி சுமந்து வந்து வேண்டுதல் வைக்கும் பக்தர்களின் கவலைகளை போக்கி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் பழனி தண்டாயுதபாணி. இந்த நம்பிக்கையில் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளராக இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம் கடந்த அக்டோபர் மாதத்தில் பழனி முருகன் கோவிலில் காவடி தூக்கி வந்து முருகனை தரிசனம் செய்தார்.

இதே போல பாஜக மாநில தலைவர் எல். முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்ட ஏராளமானோர் இன்று காவடி சுமந்து வந்து பழனி முருகனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர். கந்த சஷ்டி கவசம் சர்ச்சைக்குப் பிறகு பாஜகவினர் வேல் பூஜையை முன்னெடுத்தனர். சஷ்டி திதிகளில் கந்த சஷ்டி கவச பாராயணத்தை முன்னெடுத்தனர்.

பாஜக மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுபடை வீடுகளிலும் வேல் யாத்திரை நடைபெற்றது. இந்த நிலையில் தைப்பூசத்திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துள்ளார் மாநிலத்தலைவர் எல். முருகன்.












Click it and Unblock the Notifications